ஹூண்டாய் பிஎஸ்-4 கார்களின் விற்பனை குறித்த புதிய தகவல்!
ஹூண்டாய் பிஎஸ்-4 கார்கள் விற்பனை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான தரமுடைய எஞ்சின்களை மட்டுமே கார், பைக் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களில் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய விதிமுறைக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் கார், பைக்குகளின் எஞ்சின்களை மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகின்றன. மேலும், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நாட்டின் பெரும் கார் நிறுவனங்கள் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

வரும் டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே பிஎஸ்-4 கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. அதன்பிறகு, பிஎஸ்-6 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, இருப்பில் பிஎஸ்-4 கார்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ், புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் எலான்ட்ரா ஃபேஸ்லி)ப்ட் மாடல்களின் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் மாடல்களை அண்மையில் அறிமுகம் செய்தது.

அந்நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களாக விளங்கும் க்ரெட்டா, எலைட் ஐ20, வெனியூ உள்ளிட்ட கார்களின் பிஎஸ்-6 மாடல்களும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை பிஎஸ்-4 கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய பெட்ரோல் கார்கள் மட்டுமின்றி, டீசல் எஞ்சின் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

எனவே, ஹூண்டாய் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாடல்கள் உடனடியாக விற்பனைக்கு வரும் வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில்தான் பிஎஸ்-6 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்-6 கார்களின் விலையை அதிகமாக நிர்ணயிக்கும் சூழல் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பிஎஸ்-4 கார்களை விற்பனை செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை ஹூண்டாய் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. புதிதாக வாங்கும் கார்களை 15 ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளதால், இந்த முடிவை ஹூண்டாய் நம்பிக்கையுடன் கையில் எடுத்துள்ளது. வாடிக்கையாளர்களும் அச்சமில்லாமல் வாங்குவதற்கான வாய்ப்பை இது வழங்கும்.


Click it and Unblock the Notifications








