சான்ஸே இல்ல... இந்தியாவில் ஹூண்டாய் செய்த மாஸான சம்பவம்... என்னவென்று தெரியுமா?
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் மாஸான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு தொடக்கம் முதலே ஆட்டோமொபைல் துறையில் கடுமையான மந்தநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக கார்கள் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சியை சந்திக்கவில்லை. அதற்கு மாறாக கடும் வீழ்ச்சியையே சந்தித்து வந்தது. இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விற்பனை வீழ்ச்சி காரணமாக பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் கூட கார் நிறுவனங்கள் இறங்கின. இந்த சூழலில் சமீபத்திய பண்டிகை காலம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சற்றே நிம்மதியை கொடுத்துள்ளது. ஆம், சமீபத்திய பண்டிகை காலம் காரணமாக ஒரு சில நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

இதில், ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 44,600 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 43,709 வாகனங்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது பெரிய அளவிலான வளர்ச்சி இல்லை என்றாலும் கூட, ஹூண்டாய் நிறுவனத்திற்கு சற்றே நிம்மதி கிடைத்திருக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வெனியூ கார் அடைந்துள்ள பிரபலமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் கடைசியாக விற்பனைக்கு அறிமுகம் செய்த கிராண்ட் ஐ10 நியோஸ் காரும் சந்தையில் தன்னை விரைவாக நிலைநிறுத்தி கொண்டுள்ளது. இந்த சூழலில், ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 15,900 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனுடன் சேர்த்தால், ஹூண்டாய் கடந்த நவம்பரில் ஒட்டுமொத்தமாக 60,500 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 12,702 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 15,900 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், 25.2 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதுவும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு திருப்தியளிக்கும் விஷயம்தான்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் 7.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் ஹூண்டாய் நிறுவன கார்களின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 56,411 யூனிட்களில் இருந்து நடப்பாண்டு நவம்பர் மாதம் 60,500 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இப்படி ஒரு வளர்ச்சியை பதிவு செய்திருப்பதற்கு வெனியூவிற்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்.

இதனிடையே இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? என்பது சரியாக தெரியவில்லை. இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக வாகனங்களின் விலை உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








