மாருதியை வீழ்த்துவதற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வியூகம்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் தேர்வுகள் மூலமாக, மார்க்கெட்டில் முக்கிய இடத்ததை பிடிப்பதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக, கார் நிறுவனங்கள் பிஎஸ்-6 தரத்திற்கு ஒப்பாக எஞ்சின்களை மேம்படுத்தி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, டீசல் எஞ்சின் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தெரிவித்தது.

இந்த நிலையில், இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் தனது 1.2 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களில் இந்த டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று சிலிண்டர் எஞ்சினை மேம்படுத்துவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் போதுமான முதலீட்டை செய்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர் கார்களில் டீசல் எஞ்சின் விற்பனை பெரிய அளவிலான பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்த மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

டிசையர் காரின் டீசல் மாடல் மட்டும் ஆண்டுக்கு 1.2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்த சூழலில், மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களை கைவிட உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் கார்கள் விற்பனை என்ற வர்த்தக வாய்ப்பு இந்த செக்மென்ட்டில் இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் முடிவால், இந்த சந்தையில் ஏற்படும் வெற்றிடத்தை வர்த்தகத்தை தனக்கு சாககமாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட், இக்னிஸ் டீசல் கார்களின் சந்தையை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் மாடலின் மூலமாகவும், டிசையர் டீசல் காரின் வர்த்தக வாய்ப்பை எக்ஸ்சென்ட் கார் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மேலும், பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்படும் மாடல்களின் விலை ரூ.40,000 வரை அதிகமாக இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. டீசல் கார் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய பொருட்டாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








