ஒரு சார்ஜுக்கு 300 கிமீ செல்லும் டபுள் டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்: ஹூண்டாய் அறிமுகம்!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டடுக்கு மின்சார பஸ் மாடல் தென்கொரியாவில் நடந்து வரும் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வாகன தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. கார்கள் மட்டுமின்றி, கனரக வாகனங்களையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், பெருநகரங்களில் வாகன மாசு உமிழ்வை குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு ஹூண்டாய் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், அதிக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களில் இயக்குவதற்கான டபுள் டெக்கர் மின்சார பஸ் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடந்து வரும் போக்குவரத்து தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய மின்சார பஸ்சை ஹூண்டாய் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. தென்கொரிய அரசின் துணையுடன் இந்த பஸ் மாடலை ஹூண்டாய் வெறும் 18 மாதங்களில் உருவாக்கி இருக்கிறது.

இந்த பஸ்சில் 70 பேர் பயணிக்கலாம். சாதாரண மின்சார பஸ்களைவிட இதில் 50 சதவீதம் கூடுதல் பயணிகள் செல்ல முடியும். இந்த பஸ்சின் முதல் தளத்தில் 11 பேரும், மீதமுள்ளோர் மேல் தளத்திலும் பயணிக்கும் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வீல் சேரில் வருபவர்களுக்காக தானியங்கி முறையில் மடங்கி விரியும் சாய்வு மேடையும் இந்த பஸ்சில் இருக்கிறது. இந்த பஸ் 12,990 மிமீ நீளமும், 3,995 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த பஸ்சில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு தொாழில்நுட்பங்களும் உள்ளன.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

ஹூண்டாய் டபுள் டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்சில் 384 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமயைாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை வெறும் 72 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வாகனங்களின் நச்சுப் புகையால் மூச்சு திணறி வரும் பெரு நகரங்களுக்கு இந்த பஸ் வரப்பிரசாதமாக அமையும். இந்த பஸ்சின் மூலமாக பெரு நகரங்களில் காற்று மாசுபடுதல் வெகுவாக குறையும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications