டாடா பஸ்ஸார்டு 7 சீட்டர் எஸ்யூவி குறித்த முக்கிய விஷயங்கள்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா பஸ்ஸார்டு 7 சீட்டர் எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி குறித்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலானது பஸ்ஸார்டு என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எஸ்யூவி தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட நீளத்தில் கூடுதலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியர் எஸ்யூவியைவிட 63 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ கூடுதல் உயரமும் பெற்றிருக்கிறது. இதனால் மூன்றாவது வரிசை அமைப்புக்கு ஏதுவானதாக மாறி இருக்கிறது.

இந்த எஸ்யூவியின் டி பில்லர் வலிமையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருப்பதுடன் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்பை படங்களின் மூலமாக இந்த எஸ்யூவியில் ரூஃப் ஸ்பாய்லர் வழங்கப்பட்டு இருப்பதும் தெரிகிறது.

மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்காக தனி ஏசி வென்ட்டுகள், 12 வோல்ட் சார்ஜர், ஐ-பாட் இணைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது வரிசை இருக்கையும் போதுமான இடவசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய காரில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹாரியர் எஸ்யூவியைவிட சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் வர இருக்கும் எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








