சீனாவுடன் திடீரென கை கோர்க்கும் இந்தியா.. அரபு நாடுகளை காலி செய்யும் மோடியின் மாஸ்டர் பிளான் இதுதான்
சீனாவுடன் இந்தியா திடீரென கை கோர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் அரபு நாடுகளை காலி செய்யும் மோடியின் மாஸ்டர் பிளான் ஒன்றும் அடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால் இந்தியா, சீனா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளிடம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் இல்லை. எனவே சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் அவை கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன.

என்றாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதால், அந்நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை செலவிடுகிறது.

இதன் காரணமாக சில சமயங்களில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விடுகிறது. இந்தியா மட்டுமல்லாது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் உலகின் அனைத்து நாடுகளும் இந்த பிரச்னையால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன

குறிப்பாக அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால், மிக அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இவ்விரு நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை இரு நாடுகளின் அரசுகளும் ஊக்கப்படுத்தி கொண்டுள்ளன.

உதாரணமாக சீனாவில் செயல்படும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் குறைந்தபட்சம் 10 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்களையாவது உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொது மக்களுக்கு ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இவ்விரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இவை ஓர் உதாரணம் மட்டுமே.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் சேர்த்து சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியாவை காட்டிலும் சீனாதான் முன்னணியில் சென்று கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான லித்தியம் இயான் பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

எனவே இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், குறைந்தபட்சம் 30 சதவீத வாகனங்களாவது, எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் திட்டமிட்டபடி இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் முதலில் இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டை பெரிதாக்கியாக வேண்டும்.

எனவே சீன எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களின் பங்களிப்பை இந்தியா எதிர்பார்க்கிறது. அதாவது இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக, சீன நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் முதலீட்டை இந்தியா வரவேற்றுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் நிதி ஆயோக் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கைகோர்த்து பணியாற்றினால், பல்வேறு உச்சங்களை தொட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும் வெகுவாக குறைக்க முடியும். 2018ம் ஆண்டு நிலவரப்படி, உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விஷயத்தில் இவ்விரு நாடுகளும் இணைந்து பணியாற்றியாக வேண்டிய கட்டாயம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட்டால், அரபு நாடுகளின் வருவாய் பாதிக்கப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








