இந்திய மோட்டார் பந்தய உலகின் மூத்த புகைப்பட கலைஞர் ஜார்ஜ் மறைவு!
இந்திய மோட்டார் பந்தய உலகின் மூத்த புகைப்பட கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் (57) நேற்று சென்னையில் காலமானார்.

பாதிரியாராக சேவை செய்ய விருப்பம் கொண்டிருந்த அவர் மோட்டார் பந்தயங்களின் மீதான ஈர்ப்பால் தனது முடிவை மாற்றிக் கொண்டார். கடந்த 1984ம் ஆண்டு சோழவரம் கார் பந்தயத்தின் மூலமாக மோட்டார் பந்தய துறையில் புகைப்பட கலைஞராக தனது புதிய அத்யாயத்தை துவங்கினார்.
அவரது அதீத ஈடுபாடு காரணமாக, இந்த துறையின் மிகச் சிறந்த புகைப்பட கலைஞராக பரிணமித்தார் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் எடுத்த மோட்டார் பந்தய படங்கள் நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
மேலும், பல வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வீட்டு வரவேற்பை, படுக்கை அறையை அலங்கரிக்கவும் செய்து வருகிறது. இவர் எடுக்கும் புகைப்படங்களை பெறுவதற்கு முன்னணி பத்திரிக்கைகள் போட்டா போட்டி போடுவதுண்டு. அந்த அளவிற்கு தொழில் நேர்த்தி கலைஞராக விளங்கியவர். மேலும், புகைப்படம் எடுப்பதற்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்காதவர்.
பல முறை வாகனங்களின் கூரைகளிலும், ராலி பந்தயங்களின்போது நடந்த பல கிலோமீட்டர் தூரம் சென்று பல்வேறு புதிய கோணங்களில் படமெடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது படங்கள் மோட்டார் பந்தய ஆர்வலர்கள் மற்றும் வீரர்களின் வீட்டில் பொக்கிஷமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த எம்ஆர்எஃப் சேலஞ்ச் பந்தயம்தான் இவரது கடைசி பணியாக குறிப்பிடப்படுகிறது. உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
ஜார்ஜ் பிரான்சிஸ் மறைந்தாலும், அவர் எடுத்த நேர்த்தியான மோட்டார் பந்தய படங்கள் காலத்தால் அழியாத வகையில் பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அவரது மரணம் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








