லோக்சபா தேர்தலால் நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்து இதுதான்... ஆதாரத்துடன் வெளியான அறிக்கை...
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்தியாவிற்கு பெரும் ஆபத்து ஒன்று ஏற்படவுள்ளது. இது தொடர்பாக தற்போது ஆதாரத்துடன் கூடிய அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் வளம் இல்லாத உலகின் மிகப்பெரிய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், எண்ணெய் தேவையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகில் மிக அதிக அளவில் எண்ணெய்யை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3ம் இடத்தில் உள்ளது.

முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2017-18ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா மொத்தம் 206.2 மில்லியன் டன் எண்ணெய்யை நுகர்ந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 40 லட்சம் பேரல் (BPD-Barrels Per Day) எண்ணெய் இந்திய மக்களால் நுகரப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு பயன்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி (LPG-Liquefied Petroleum Gas) ஆகியவைதான் இந்தியாவிற்கான மிக முக்கிய எண்ணெய் தேவையாக உள்ளன.

இதிலும் போக்குவரத்திற்கான பெட்ரோலிய பொருட்களே இந்தியாவிற்கு அதிகமாக தேவைப்படுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், இந்தியாவின் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் தேவை 157.4 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

இது கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் வரையிலான கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் அதிகம் ஆகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எது அதிகம் நுகரப்படுகிறது என பார்த்தால், டீசல்தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த சூழலில், முதன்மையான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான வுட் மெக்கென்சி (Wood Mackenzie) அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ''இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரித்து கொண்டே வரும்.

இதன் காரணமாக 2019ம் ஆண்டில், அதிகமாக எண்ணெய்யை நுகரும் நாடுகளின் பட்டியலில், சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு, இந்தியா இரண்டாவது இடத்திற்கு வரும். ஆனால் அமெரிக்காவே முதலிடத்தில் நீடிக்கும்'' என கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில் இந்தியாவின் டீசல் தேவை ஒரு நாளைக்கு 93 ஆயிரம் பேரல்களாக இருந்தது. ஆனால் 2019ம் ஆண்டில் இது ஒரு நாளைக்கு 1,12,000 பேரல்களாக உயரும் என வுட் மெக்கென்சி கணித்துள்ளது. இது 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் அதிகம் ஆகும்.

எண்ணெய் தேவை அதிகரிப்பில், சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவது இந்தியாவிற்கு நல்லதல்ல. ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவிடம் போதிய அளவிற்கு எண்ணெய் வளம் இல்லை.

குறிப்பாக பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலம்தான் பூர்த்தியாகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தால் மட்டுமே பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும்.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் எரிபொருள் தேவை சீனாவை விட அதிகமாகும் என வெளியாகியுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு இன்னும் அதிகமாகி, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கூறப்படுவதே இதற்கு காரணம்.

கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு ஓபெக் (OPEC-Organization of the Petroleum Exporting Countries) எனப்படுகிறது. இதில் எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களான உள்ளன.

இந்த நாடுகளிடம் இருந்துதான் தற்போது இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இந்த ஓபெக் கூட்டமைப்பானது, 2040ம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 58 லட்சம் பேரல்களாக உயரும் என கடந்த ஆகஸ்ட் மாதம் கணித்திருந்தது.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதே எரிபொருள் தேவை உயர்ந்து வருவதற்கு காரணமாக உள்ளது. இதுதவிர இந்தியாவின் எரிபொருள் தேவை சீனாவை விட அதிகமாகும் என்பதற்கு 2019 நாடாளுமன்ற தேர்தலையும் வுட் மெக்கன்சி ஒரு காரணமாக கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் வெகு விரைவில் முடிவடைகிறது. எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது பிரசாரம் உள்ளிட்ட வேலைகளுக்காக வாகனங்களின் இயக்கம் அதிகரிக்கும்.

இதனாலும் இந்தியாவின் எரிபொருள் தேவை உயரும் என வுட் மெக்கன்சி கணித்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் தேவையை குறைக்க முடியும்.

சீனாவில் இத்தகைய வாகனங்கள் தற்போது அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில், சீனா உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகவே சீனாவின் பெட்ரோல், டீசல் தேவை கணிசமாக குறைந்துள்ளது.

வருங்காலங்களில் சீனாவின் பெட்ரோல், டீசல் தேவை இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் தேவையை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும்.

அத்துடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால் தற்போது இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருகையில், காற்று மாசுபாடு பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்.


Click it and Unblock the Notifications








