டீசல் இல்லமா வண்டி நின்னுடுச்சா?... அப்போ இதை செய்யுங்க சென்னை வாசிகளே... வாசல் தேடி வரும் டீசல்
இந்தியன் ஆயில் நிறுவனம் டீசலை டோர் டெலிவரி செய்யும் சேவையை சென்னையில் ஆரம்பிக்க உள்ளது. இந்த சேவையைப் பெற என்ன செய்ய வேண்டும்?...

உலக சந்தையில் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதன்காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதேசமயம் எரிபொருளின் மீதான கிராக்கியும், அதன் தேவையுடன் போட்டிப் போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோல், டீசலுக்காக சவுதி அரேபியா, ஈரான், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளைத்தான் நம்பியுள்ளது. ஏனென்றால் இவைகளிடம்தான் கச்சா எண்ணெய் வளம் அபரிமிதமாக உள்ளது.

அதன்படி, இந்த நாடுகளிடம் இருந்து எரிபொருளை பெறும் நாடுகள், மக்களின் தேவைக்கேற்ப பெட்ரோல், டீசல் விற்பனையைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு டீசலை டோர் டெலிவரி செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சேவையின் முன்னோட்டம் முதலில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த சேவையை சென்னை வாசிகளுக்கும் அளிக்க இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களின் டீசல் தேவை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

ஆனால் இந்த சேவையை உபயோகிக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தது 200 லிட்டர் டீசலை வாங்க வேண்டும். மேலும், அவர்கள் 2 ஆயிரத்து 500 லிட்டர் அளவிலான டீசலைப் பெறலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் பி.ஈ.எஸ்.ஓ., என்ற டீசல் சேமிப்பு தரச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே டீசல் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சேவையின் மூலம், வர்த்தக ரீதியாக இயங்கும் நிறுவனங்கள், டிராவல்ஸ் ஏஜென்சிகள், டிரான்போஸ்போர்டர்ஸ் உள்ளிட்டோர் பயனடைவார்கள். இதற்காக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுக்கொண்ட டேங்கர் லாரி, மீட்டர் அளவையுடன் தயார் நிலையில் இருக்கும். வாடிக்கையாளர்கள் அழைப்பைத் தொடர்ந்து அவர்களின் தேவைக்கேற்ப டீசலை விநியோகிக்கப்படும்.

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆப்பை டவுண்லோட் செய்து, அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் டீசல் உடனடியாக அவர்களது வீடு வாசல் தேடி வந்துவிடும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த முன் முயற்சியானது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் டீசல் விநியோகத்தை செய்யும் நோக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் டீசல் தேவைக்காக நெடுந்தூரம் பயணிக்கும் அசவுகரியம் தவிர்க்கப்படும்.

மஹாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை சோதனையோட்டமாக முதன் முதலில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் மற்ற மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








