பேராபத்தில் சிக்கி கொண்ட இந்தியா... இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கப்போகும் விபரீதம் இதுதான்...
பெரிய ஆபத்து ஒன்றில் இந்தியா சிக்கி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
பெரிய ஆபத்து ஒன்றில் இந்தியா சிக்கி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இந்தியாவிடம், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் போதிய அளவிற்கு இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது!! இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டுள்ளது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில், மக்கள் மத்தியில் தயக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

இதுபோன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகளின் மூலமாக, வரும் 2022ம் ஆண்டிற்குள், கச்சா எண்ணெய் இறக்குமதியை, தற்போது உள்ளதை காட்டிலும், குறைந்தபட்சம் 10 சதவீதம் என்கிற அளவிற்காவது குறைத்து விட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் மற்றும் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு, அதிக அளவிலான மக்கள் மாறினால், கச்சா எண்ணெய் தேவை குறைந்து, அதன் இறக்குமதியும் குறையும்.

அத்துடன் காற்று மாசடைவதையும் பெரிய அளவில் தடுத்து விட முடியும். ஆம், தற்போது மிக அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையானது, காற்றை வெகுவாக மாசுபடுத்தி வருகிறது.

இதனால் தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. அந்த நகரங்களில் வசிக்கும் மக்களின் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஆனால் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாது. ஏனெனில் இந்த வாகனங்கள் அனைத்தும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டையும் பாதுகாக்க முடியும் என்ற காரணத்தால்தான், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 217 மில்லியன் டன்களாக (Million Tonne-MT) இருந்தது. ஆனால் வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையானது, இதைக்காட்டிலும் 61 சதவீதம் அதிகரிக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையானது 350 மில்லியன் டன்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், டீசலுக்கான தேவை மட்டும் தற்போது உள்ளதை காட்டிலும் அப்படியே இரட்டிப்பாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-18ம் ஆண்டில் இந்தியாவின் டீசல் தேவையானது 81.1 மில்லியன் டன்களாக இருந்தது. ஆனால் வரும் 2029-30ம் ஆண்டிற்குள், இந்தியாவின் டீசல் தேவை 163 மில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், இந்தியாவின் பெட்ரோல் தேவையும் அதிகரிக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில், இந்தியாவின் பெட்ரோல் தேவை 26.2 மில்லியன் டன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் 2029-30ம் ஆண்டிற்குள் இது 49 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த தகவல்களை எல்லாம் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முயன்று வரும் சூழலில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. இதன்படி இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்தால், பொருளாதாரத்துடன் சேர்த்து சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்போதைய நிலையிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. இதுவே கச்சா எண்ணெய் தேவை 350 மில்லியன் டன்களாக உயர்ந்தால், அதன் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை இன்னும் அதிகரிக்கும்.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து கொண்டுதான் உள்ளது. என்றாலும் அது தேவைக்கு போதுமானதாக இருக்காது. பெரிய அளவில் இறக்குமதி செய்வதன் மூலமாக மட்டுமே கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








