மின்சார வாகனங்களுக்கான இந்தியாவின் முதல் 'இ- காரிடார்' நெடுஞ்சாலைகள்!
மின்சார வாகனங்கள் பயணிப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் டெல்லி - ஆக்ரா மற்றும் டெல்லி - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது. ஆனால், மின்சார கார்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்வதற்கு ஏதுவான சூழல் ஏற்படும் என்று வாகன நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

மேலும், நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்ற குறையை போக்கும் விதத்தில், நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமாக உள்ளது. இதன்மூலமாகவே, வாடிக்கையாளர்களை ஓரளவு கவர்ந்து இழுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, டெல்லி - ஆக்ரா இடையிலான யமுனா எக்ஸ்பிர்ஸ் சாலையிலும், டெல்லி - ஆக்ரா இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 48 ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நெடுஞ்சாலைகளிலும் 18 சார்ஜிங் நிலையங்கள் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி ஒத்துழைப்புடன், தனியார் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்கிறது.

மின்சார வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான வசதி மட்டுமின்றி, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இந்த நிலையங்களில் கிடைக்கும். இந்த இரண்டு சாலைகளிலும் மின்சார வாகனத்தில் செல்வோர் கவலை இல்லாமல் பயணத்தை தொடரும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் 8 முதல் 10 சார்ஜர்கள் மற்றும் 20 சார்ஜ் ஏற்றும் பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். எனவே, ஒரே நேரத்தில் பல மின்சார வாகனங்கள் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

டெல்லி- ஆக்ரா மற்றும் டெல்லி - ஜெய்ப்பூர் இடையிலான இரண்டு நெடுஞ்சாலைகளிலும் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பணி முடிந்து செப்டம்பரில் சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட இருக்கின்றன. அடுத்தாண்டு மார்ச் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








