இந்தியாவிலேயே இதை செய்த முதல் நிறுவனம் இதுதான்... அதுவும் மாநிலத்தின் அங்கீகாரத்துடன்...!
இ-டிரியோ என்னும் நிறுவனம் மாநில அரசின் அங்கீகாரத்துடன், இந்தியாவிலேயே வேறெந்த நிறுவனம் செய்யாத ஓர் முயற்சியை செய்து வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க மின் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறுவது தற்போது கட்டாயமான சூழலாக உருவாகி வருகிறது. மேலும், நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் அண்மைக் காலங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மின் வாகனங்களுக்கு சிறப்பு மானியம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இருப்பினும், தற்போது அறிமுகமாகும் மின் வாகனங்கள் அதிக விலையைக் கொண்டு சந்தையில் விற்பனைக்கு வருவதால், அதனை அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இ-டிரியோ நிறுவனம், சாதரண எரிபொருள் வாகனத்தை மின் வாகன வாகனமாக மாற்றும் பணியினைச் செய்து வருகிறது.

அந்த வகையில், அண்மையில் இந்த நிறுவனம் சுஸுகி நிறுவனத்தின் செடான் ரக ஆல்டோ காரை எலக்ட்ரிக் காராக மாற்றியது. மேலும், அந்த காரினை ஹைதராபாத் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார்புரோ இணையதளம் வெளியிட்டுள்ளது.

இ-டிரியோ நிறுவனம் எந்தவொரு எரிபொருள் வாகனத்தையும் மின் வாகனமாக மாற்றும் பணியை சமீபகாலமாக செய்து வருகிறது. ஆனால், ஆல்டோ 'ரெட்ரோ-ஃபிட்டட்' எலக்ட்ரிக் காரைத்தான் ஆர்டிஓ-இல் அந்த நிறுவனம் முதல் முறையாக பதிவு செய்துள்ளது. இந்தியாவில், எரிபொருள் வாகனத்தை பேட்டரி வாகன மாற்றி ஆர்டிஓ-வில் பதிவு செய்தவதும் இதுவே முதல் முறையாகும்.

இதேபோன்று, இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஆர்ஏஐ அமைப்பின் மூலம் அங்கீகாரம் பெற்று, எரிபொருள் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் டிரியோ நிறுவனம் மட்டும்தான் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் மாருதி சுஸுகி ஆல்டோ உட்பட வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரையும் இவ்வாறு மின் வாகனமாக மாற்றியுள்ளது.

இதில், தற்போது ஆல்டோ காருக்கு மட்டும் ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட ஆர்சி புத்தகத்தின் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆர்டிஓ பதிவு பத்திரத்தில் (RC Book) வாகனத்தை எரிபொருளில் இருந்து எலக்ட்ரிக் வாகனமாக மாற்றியது மற்றும் காரின் அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், வாகனம் தற்போது எலக்ட்ரிக் காராக மாறியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இ-டிரியோ நிறுவனம் டிசையர் காரையும் மின் வாகனமாக மாற்றும் உபகரணங்களை ஏஆர்ஏஐ அமைப்பின் அங்கீகாரத்துடன் வாங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, டாடா இண்டிகோ, ஹூண்டாய் சேன்ட்ரோ, மாருதி சுஸுகி ரிட்ஸ் உட்பட மேலும் சில கார்களையும் மின்வாகனமாக மாற்றும் உபகரணங்களையும் தயார் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களாக மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இ-டிரியோ கூறியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டில் இருந்து மின் வாகனமாக காரை உருவாக்கும்போது, அந்த காரின் வழக்கமான எஞ்ஜின் மாற்றப்பட்டு மின் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதேபோன்று, எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும், அதே வாயிலில்தான் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான வாயில் நிறுவப்படுகிறது. காருக்கு சக்தியை வழங்கும் பேட்டரிகளை, வாகனத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு, பேட்டரிகளை அடிப்பகுதியில் பொருத்துவதன் மூலம் இடப் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

அவ்வாறு, காரின் மின் மோட்டாருக்கு சக்தி வழங்க லித்தியம்-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரிகள் தற்போது வடகொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இ-டிரியோ நிறுவனம் இந்த பேட்டரிகளை உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இதனால், தற்போது அதிக விலையைக் கொண்டிருக்கும் பேட்டரிகள் கணிசமான விலை குறைவைப் பெரும் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, எலக்ட்ரிக் காராக மாற்றப்படும் எரிபொருள் காரில் உள்ள பழைய ஏசி, மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றையும் இ-டிரியோ மாற்றி புதிய கருவிகளைப் பொருத்துகிறது. இதேபோன்று, இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்படுகிறது. இது, பேட்டரி அளவு, சார்ஜிங் மற்றும் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும்.

இ-டிரியோ நிறுவனம் தற்போது 150 கிமீ தூரம் வரை செல்லும் பேட்டரிகளை காரில் இணைத்து வருகிறது. இதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அதிகரித்தும் வழங்குகிறது. மேலும், இந்த மாற்றத்தைப் பெறும் வாகனங்களின் பேட்டரியை 4 முதல் 5 மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதும், அவை முழுமையான சார்ஜிங் அளவை பெற்றுவிடும். இவையனைத்தையும், மலிவான விலையில் பேக்கேஜ் முறையில் இ-டிரியோ நிறுவனம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








