1,000 கிமீ ரேஞ்ச் உடன் எலெக்ட்ரிக் வாகன பேட்டரி! தீ பற்றிய கவலைக்கும் முற்றுப்புள்ளி வைத்த டெக்னாலஜி
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இன்னோலித் ஏஜி நிறுவனம், 1,000 கிலோ மீட்டர் ரேஞ்ச் உடன் புதிய எலெக்ட்ரிக் வாகன பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீ விபத்து அபாயங்களையும் குறைக்கிறது.

எதிர்கால உலகை ஆளப்போவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர். அதற்கு ஏற்ப உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெகு வேகமாக மக்களை சென்றடைந்து வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே ஒரு சிலரை பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறைவாக இருப்பது முதலாவது காரணம். எலெக்ட்ரிக் வாகனங்கள் திடீர் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் இரண்டாவது காரணம்.
இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக புதிய பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளது இன்னோலித் ஏஜி (Innolith AG). சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. 1,000Wh/kg என்ற மிக அதிக அடர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிக்கு, ''இன்னோலித் எனர்ஜி பேட்டரி'' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனங்களை 1,000 கிலோ மீட்டர்கள் வரை செல்ல இந்த பேட்டரி அனுமதிக்கிறது. சரியாகதான் படித்துள்ளீர்கள். 1,000 கிலோ மீட்டர்கள்தான்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படப்போகும் எளிதில் தீப்பற்றாத முதல் லித்தியம் சார்ந்த பேட்டரியாகவும் இன்னோலித் எனர்ஜி பேட்டரி இருக்கப்போகிறது என சுவிஸ் ஸ்டார்அப் உறுதியாக கூறுகிறது. தீப்பற்றாத இன்ஆர்கானிக் எலெக்ட்ரோலைட்டை இதில் பயன்படுத்தியிருப்பதே இதற்கு காரணம். பேட்டரி தீப்பிடிப்பதற்கான முக்கியமான காரணிகளை இது நீக்கி விடுகிறது. தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களில் காணப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளில், எளிதில் தீப்பற்றக்கூடிய ஆர்கானிக் எலக்ட்ரோலைட் பயன்படுத்தப்படுகிறது.
முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட 2 பிரச்னைகளுக்கும் இன்னோலித் எனர்ஜி பேட்டரி தீர்வை கொடுப்பதால் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பேட்டரியை விரைவில் மார்க்கெட்டிற்கு கொண்டு வர இன்னோலித் ஏஜி திட்டமிட்டு வருகிறது. தனது புதிய ஹை டென்சிட்டி பேட்டரி பேக்கின் மீது ஆர்வமுள்ள பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இன்னோலித் ஏஜி கூட்டணி அமைக்கவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இன்னோலித் ஏஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) செர்ஜி புச்சின் கூறுகையில், ''ஒரு குறுகிய வரம்பிற்குள் மட்டுமே கிடைக்கும் பேட்டரிகளால், எலெக்ட்ரிக் வாகன துறையின் புரட்சி முடக்கப்பட்டுள்ளது. மலிவான எலெக்ட்ரிக் காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதுமான ரேஞ்ச் கிடைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இது தீப்பிடிக்காது என்ற நம்பிக்கையும் அவர்களின் தேவையாக உள்ளது. இந்த தேவைகள் அனைத்தையும் இன்னோலித் எனர்ஜி பேட்டரியால் பூர்த்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் ஒரு திருப்புமுனை'' என்றார்.


Click it and Unblock the Notifications








