இந்தியாவிற்கே பெருமிதம்... டாடா பற்றிய இந்த ஆச்சரிய விஷயங்கள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்...
இந்தியாவிற்கே பெருமிதம் தேடி தந்து கொண்டிருக்கும் டாடா பற்றிய இந்த விஷயங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவை சேர்ந்த டாடா குழுமம் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள், டிரக்குகள், வேன்கள், பஸ்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் ராணுவ வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நமது நாட்டிற்கு பல்வேறு முறை பெருமை தேடி தந்துள்ளது. அப்படிப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1945ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் தற்போதைய வயது 74. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு முன்பாக டெல்கோ என்றுதான் (TELCO - Tata Engineering and Locomotive Company) அறியப்பட்டு வந்தது. பின் நாட்களில்தான் டெல்கோ நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆனது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்த டிரக்குகள் மெர்சிடிஸ் லோகோவை தாங்கியிருந்தன. டெய்ம்லர் பென்ஸ் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் அமைத்திருந்த கூட்டணிதான் இதற்கு காரணம். இந்த கூட்டணி கடந்த 1969ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனால் மெர்சிடிஸின் மூன்று முனை நட்சத்திர லோகோ விலகி, டாடாவின் 'T' லோகோவிற்கு வழி கிடைத்தது.

ஆரம்பத்தில் டிரக்குகள் மூலமாகதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புகழ்பெற்றதாக விளங்கியது. கடந்த 1955ம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா-பாம்பே ரேலியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3 டிரக்குகள் பங்கேற்றன. அவை பிரேக்டவுன் ஆகாமல் 8 ஆயிரம் மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன் முதலாக டிரக்குகளை ஏற்றுமதி செய்தது இலங்கைக்குதான் (அப்போது சிலோன்). இலங்கைக்கு கடந்த 1961ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிரக்குகளை ஏற்றுமதி செய்தது. தற்போது 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், சுமார் 45 நாடுகளுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிரக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

பிரிட்டனின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ்தான் நிர்வகித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடாவின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய நிலையில் உலகம் முழுக்க 85 லட்சத்திற்கும் அதிகமான டாடா பிராண்டு வாகனங்கள் ஓடி கொண்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் காரான ராசிமோவை (Racemo) டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் லான்ச் செய்தது. தனது சப்-பிராண்டான டாமோவின் (TAMO) மூலமாக ராசிமோ ஸ்போர்ட்ஸ் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. 2 சீட்டர் கூபே ரக காரான இது மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6 வினாடிகளுக்கு உள்ளாக எட்டி விடும்.

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் காரை அறிமுகம் செய்ததும் கூட டாடா மோட்டார்ஸ்தான். டாடா இண்டிகா கார்தான் அது. இந்தியாவின் முதல் முழு உள்நாட்டு கார் இதுவே. இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பம் மற்றும் பாகங்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'மேட் இன் இந்தியா' கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே சர்வதேச அரங்கில் இருந்து வருகிறது. அந்த குறையை போக்கியதும் டாடா மோட்டார்ஸ்தான். குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை நமக்கு தேடி தந்தது டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான்.

மிகவும் மலிவான விலையில் நானோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த நிறுவனம் டாடா மோட்டார்ஸ். உலகில் மிகவும் மலிவான விலையில் விற்பனையாகும் கார் என்ற பெருமை டாடா நானோவிற்கு இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக டாடா நானோ இந்தியாவில் பெரும் தோல்வியை சந்தித்து விட்டது.


Click it and Unblock the Notifications