15 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணம்: இந்தியர்களுக்கு அர்பணிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் கார்?
வெறும் பதினைந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் மின் வாகனத்தை ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் குறித்த மேலும் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியா வாகனங்களின் வளர்ந்து வரும் சந்தையாக இருந்தாலும், மின் வாகனங்களுக்கு சந்தை இதுவரை பெரிதாக தொடங்கவில்லை. மக்களுக்கும் மின் வாகனங்கள் குறித்த புரிதல் முழுமையாக சென்றடையவில்லை. ஆனாலும், அரசு மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதனை அப்படியே விட்டுவிடாமல், அவர்களுக்கான பணியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உட்பட பல்வேறு சலுகைகளை வழங்க திட்டம் வகுத்து வருகின்றனர். அதனடிப்படையில் ஃபேம் (FAME) உள்ளிட்ட சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எப்படியாவது தங்களது மின் வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்துவிட வேண்டும் நோக்கில், அண்மைக் காலங்களாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இதனடிப்படையில், ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஜாகுவார் நிறுவனமும் தனது எலக்ட்ரிக் மாடலான ஜாகுவார் ஐ-பேஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாகுவார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பாதக கூறப்படும், இந்த எலக்ட்ரிக் கார்தான், அந்த நிறுவனத்தின் முதல் மின் தயாரிப்பாகும். இந்த எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு பாதி எஸ்யூவி ரகத்திலும், பாதி ஹேட்ச்பேக் ரகத்திலும் காட்சியளிக்கிறது. அதே சமயம், அது கூப் ஸ்டைலிலும் காட்சியளிக்கிறது. இந்த கார் சி-எக்ஸ்75 காரின் நிழலாகவும் பிரதிபலிக்கிறது.

இந்த புத்தம் புதிய எலக்ட்ரிக் கார் குறித்து ஜாகுவார் நிறுவனம் கூறுகையில், "ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் இன்டீரியர் மிகப்பெரிய எஸ்யூவி காரின் சௌகரியத்தைப் பயணிகளுக்கு அளிக்கும்" என்றது.

ஜாகுவார் ஐ-பேஸ் காரில், 90kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதனை டிசி சார்ஜிங் போர்ட்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 40 நிமிடங்களில் 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும்.

அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100கிமீ தூரம் வரைச் செல்லக்கூடிய சக்தியை இந்த பேட்டரிகள் சேகரித்துக்கொள்ளும். ஆனால், சாதாரண சார்ஜிங் போர்ட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது, 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை அடைய பத்து முதல் 12 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளுமாம்.

இந்த புத்தம் புதிய எலக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்கும். இந்த எஞ்ஜின் 400 பிஎஸ் பவரையும், 696 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், காரினை 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 விநாடிகளில் தொடுவதற்கு இந்த எஞ்ஜின்கள் உதவுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும்.

இந்த ஐ-பேஸ் காரில் இதுமட்டுமின்றி அதிநவீன தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவை குறித்து அதிகாரப்பூர்வான தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த கார் இந்தியாவில் வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








