மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்... பயன்பாடின்றி கிடக்கும் அவல நிலை...
முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்காக வாங்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்று பயன்படுத்தப்படாமல் பாராளுமன்ற கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மக்கள் பணியாற்றுவதற்காகவே அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினாலும், பலர் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே இதில் களமிறங்குகின்றனர்.
இதனை, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளைப் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

இந்நிலையில், முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்காக வாங்கப்பட்ட அதிக விலையுயர்ந்த ஜாகுவார் செடான் ரக கார், பயன்படுத்தப்படாமல், அரசு கராஜில் புழுதியடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையின் சபாநாயகராக சுமித்ரா மகாஜன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது, தனது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட காரில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி, கடந்த 2016ஆம் ஆண்டு சொகுசு காரான ஜாகுவார் நிறுவனத்தின் செடான் ரக எக்ஸ்இ மாடலை வங்கினார்.

இந்த கார், இந்தியாவில் ரூ. 48.25 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இதனை, சபாநாயகரின் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கியதாக பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், இந்த காரில் போதுமான வசதிகள் இல்லையெனி கூறி டொயோட்டா கேம்ரி காரை அவர் பயன்படுத்த ஆரம்பித்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக சொகுசு வசதிகளுடன் பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட ஜாகுவார் எக்ஸ்இ கார் பயன்படுத்தப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த செய்தியை தி பிரிண்ட் தளம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுமித்ரா மகாஜன் கூறியதாவது, "என்னுடைய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கார், ஏற மற்றும் இறங்க சற்று கடினமானதாக இருந்தது. ஆகையால், ஜாகுவாரின் இரண்டு மாடல்களை நான் தேர்வு செய்தேன். எனக்கு கார்கள்குறித்த போதுமான புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. இதில், நான் தேர்வு செய்த இரு மாடல்கள் இல்லாமல், நான் பார்க்காத ஓர் மாடலை அதிகாரிகள் வாங்கினர். அது பின்னிருக்கையில் அமர்வதற்கு அதிக சிக்கலை ஏற்படுத்தியது. ஆகையால், அந்த காரை பயன்படுத்துவதை நிறுத்தினேன்" என்றார்.

இதில், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தேர்வு செய்ததாக கூறிய என்னென்ன என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், புதிதாக வாங்கப்பட்ட ஜாகுவார் எக்ஸ்இ மாடலை அவர் எத்தனை காலம் பயன்படுத்தினார் என்பதும் தெரியவில்லை.

ஆனால், அது அவரின் பயணத்திற்கு போதுமான சொகுசு வசதியை வழங்கவில்லை என்ற காரணத்தினாலயே, அதனை தவிர்த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மக்களவையின் தற்போதைய சபாநாயகர் ஓம் பிர்லா, புதிய டொயோட்டா கேம்ரி காரை பயன்படுத்தி வருகின்றார். இதன் விலை ரூ. 40 லட்சம் ஆகும். இவ்வாறு, கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஐந்து புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஆகையால், கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து சபாநாயகர்களுக்காக வாங்கப்படும் கார்களுக்கான தொகை அதிகரித்து வருவதாக ஆர்டிஐ தகவல் மூலம் வெளிவந்துள்ளது. அதில், ஜாகுவார் எக்ஸ்இ கார்தான் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








