மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
வரும் 2022ம் ஆண்டு முதல் மின்சார கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களும் மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. எஸ்யூவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிகளை தொடர்ந்து பின்பற்றி வருவதால், ஜீப் எஸ்யூவிகளுக்கு பெரும் ரசிக பட்டாளமும், வாடிக்கையாளர் வட்டமும் உள்ளது.

குறிப்பாக, ஆஃப்ரோடு எஸ்யூவிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், எதிர்கால வர்த்தகத்தை வலுவாக வைத்திருக்கும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களை களமிறக்க உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டு முதல் ஹைப்ரிட் மற்றும் மின்சார மாடல்களை களமிறக்கும் பணியை துவங்க இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு ஹைப்ரிட் மாடல்கள் வீதமும், தொடர்ந்து எலெக்ட்ரிக் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.

ஏற்கனவே, க்ராண்ட் கமாண்டர் உள்ளிட்ட எஸ்யூவிகளின் ஹைப்ரிட் மாடல்களை ஜீப் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், ரேங்லர், க்ராண்ட் கமாண்டர், காம்பஸ், ரெனிகேட் ஆகிய மாடல்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதுதவிர்த்து, லெவல் 3 ஆட்டோனாமஸ் கார்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஜீப் நிறுவனத்தின் தலைவர் க்றிஸ்டியன் மியூனிர் கூறுகையில்," பசுமை எஸ்யூவிகளை கொண்ட சிறந்த பிராண்டாக ஜீப் மாறும். எங்களது மின்சார எஸ்யூவி மாடல்கள் அதிசெயல்திறன் மிக்கதாகவும், மிக வேகமானதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர்த்து, வரும் 2021ம் ஆண்டு முதல் டீசல் எஞ்சின் கார்களை முற்றிலும் நிறுத்துவதற்கும் ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் மின்சார மாடல் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அடுத்த சில ஆண்டுகளில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. இதன்மூலமாக, இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டிலும் ஜீப் முக்கிய இடத்தை பெற முடியும்.

மேலும், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் எஸ்யூவி மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி வேறு பெயரில் அறிமுகமாகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு இது போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.


Click it and Unblock the Notifications








