எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்திற்காக கூட்டணி போட்ட பிஎம்டபிள்யூ - ஜாகுவார் லேண்ட்ரோவர்!
எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கூட்டாக செயல்பட பிஎம்டபிள்யூ மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த நிலையில், இதற்கான முதலீட்டு செலவை வெகுவாக குறைக்கும் விதமாக கார் நிறுவனங்கள் பிற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்பட துவங்கியுள்ளன.

அந்த வகையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான டிரான்ஸ்மிஷன் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் பிஎம்டபிள்யூ மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ3 மற்றும் ஐ8 என்ற ஹைப்ரிட் கார்கள் மூலமாக எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அதேபோன்று, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமும் ஜாகுவார் ஐ-பேஸ் என்ற மின்சார எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் தயாரிக்க இருக்கும் புதிய எலெக்ட்ரிக் மாடல்களுக்கான தொழில்நுட்பத்தை இணைந்து உருவாக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களையும் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதனால், முதலீட்டு செலவு வெகுவாக குறையும். மேலும், ஒரே சப்ளையர்களிடமிருந்து இரு நிறுவனங்களும் முக்கிய உதிரிபாகங்களை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இதனால், இரு நிறுவனங்களும் பல்வேறு அனுகூலங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைனில் வேறுபட்டாலும், இந்த நிறுவனங்களின் புதிய மின்சார கார்களில் இடம்பெற இருக்கும் தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஒரே தாத்பரியங்களை பெற்றிருக்கும். இதனால், மிக செம்மையான தொழில்நுட்பங்களை பிஎம்டபிள்யூ, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களில் வர இருக்கும் புதிய மின்சார கார்களில் காண முடியும்.

ஆனால், கார் உற்பத்தியானது தனித்தனியாக தங்களது ஆலைகளில் மேற்கொள்வதற்கு இரு நிறுவனங்களும் முடிவுவ செய்துள்ளனர். இரு நிறுவனங்களின் கூட்டணியின் மூலமாக மிக உயரிய மின்சார தொழில்நுட்பத்தை ஆட்டோமொபைல் துறை பெறும் என்று நிபுணர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications