அரசு பள்ளிக்கு மாணவர்கள் வர கார், டீசல்.. இந்த ஆசிரியர் செலவழிக்கும் தொகை தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் சொந்த செலவில் கார்கள் வாங்கியதுடன், அவற்றுக்கு டீசலும் நிரப்பி வருகிறார். இதற்காக அவர் மாதந்தோறும் செலவழிக்கும் தொகை எவ்வளவு என தெரிந்தால், இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா? என நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வம். அதே கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்ன சேங்கல் என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் அன்புச்செல்வம் கடந்த 2012ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். அப்போது 78 மாணவ, மாணவிகள் படித்து கொண்டிருந்தனர். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2014ம் ஆண்டில், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 58ஆக குறைந்தது.

அருகேயுள்ள மேலத்தோட்டம், குட்டிகாரன்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள்தான், இப்பள்ளிக்கு வந்து படித்து கொண்டிருந்தனர். ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால், இப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்புவதை அவர்களின் பெற்றோர்கள் தவிர்க்க தொடங்கினர்.

இதன் காரணமாகதான் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனை சில தனியார் பள்ளிகள் சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது இக்கிராமங்களுக்கு தனியார் பள்ளிகளின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதன்மூலம் போக்குவரத்து வசதி கிடைத்ததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்க்க தொடங்கினர். சின்ன சேங்கல் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்குதான் சென்று வருகின்றனர்.

இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அவர்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக அவர்கள் அதிகளவு கடன் வாங்க நேரிட்டது.

இதனை தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் புரிந்து கொண்டார். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம், தனது சொந்த செலவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை, தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் வாங்கினார்.

பின்னர் மேலத்தோட்டம், குட்டிகாரன்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற அன்புச்செல்வம், தன்னிடம் கார் இருப்பதாகவும், இந்த காரில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து சென்று, நானே மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு விடுகிறேன் என பெற்றோர்களிடம் உறுதியளித்தார்.

தலைமை ஆசிரியர் அன்புச்செல்வத்தின் உயர்வான எண்ணத்தை புரிந்து கொண்ட பெற்றோர்கள், தனியார் பள்ளிகளுக்கு பதிலாக மீண்டும் சின்ன சேங்கல் அரசு பள்ளிக்கே தங்கள் குழந்தைகளை அனுப்ப தொடங்கினர்.

ஆசிரியர் அன்புச்செல்வம் தான் உறுதியளித்தபடியே காலை நேரத்தில் தனது வேகன்ஆர் காரில், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். மாலை பள்ளி முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்கே சென்று விட்டு விடுவார்.

காலையில் மாணவ, மாணவிகளை ''பிக் அப்'' செய்வதற்காக 3 டிரிப், மாலையில் அவர்களை வீடுகளில் ''டிராப்'' செய்வதற்காக 3 டிரிப் என அன்புச்செல்வம் ஒரு நாளைக்கு 6 டிரிப் காரை ஓட்டி வந்தார். தனது தலைமை ஆசிரியர் பணிக்கு மத்தியில், இந்த கூடுதல் பணியையும் அன்புச்செல்வமே கவனித்தார்.

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இந்த வேலையையும் தலைமை ஆசிரியர் அன்புச்செல்வமே செய்தார். ஒரு வேளை வேறு டிரைவரை பணிக்கு அமர்த்தினால், மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என அவர் நினைத்திருக்கலாம்.

இதன் காரணமாக சின்ன சேங்கல் அரசு பள்ளியில், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. எனவே கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செவர்லே டவேரா (Chevrolet Tavera) காரை தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் வாங்கினார்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் காருடன் ஒப்பிடுகையில் செவர்லே டவேரா பெரியது. எனவே இதில் அதிகம் பேர் பயணிக்க முடியும். எனவேதான் தனது சொந்த பணம் 4.50 லட்ச ரூபாயை செலவழித்து, செவர்லே டவேரா காரை தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் வாங்கினார்.

இவரின் இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக சின்ன சேங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தற்போது 120ஆக அதிகரித்துள்ளது. இதில், 70 பேரை தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம்தான் செவர்லே டவேரா காரில் பிக் அப் மற்றும் டிராப் செய்து வருகிறார்.

காருக்கு டீசல் நிரப்புவதற்காக ஒரு மாதத்திற்கு 14 ஆயிரம் ரூபாய் செலவு ஆவதாக தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அதற்கும் தனது சொந்த பணத்தையே அவர் செலவு செய்து வருகிறார்.

விகடன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பணிக்காக அன்புச்செல்வம் அதிகம் விடுப்பு எடுப்பதில்லை. ஒருவேளை விடுப்பு எடுக்க நேர்ந்தாலும் கூட, காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகளை பிக் அப், டிராப் செய்யும் பணியை செய்து விடுகிறார்.

இதன் காரணமாக தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் தற்போது தமிழகம் முழுக்க பிரபலமாகியுள்ளார். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இக்காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என அவரை பலரும் வியந்து போற்றி வருகின்றனர்.

மார்க்கெட்டில் பல்வேறு கார்கள் கிடைக்கும் சூழலில், மாணவ, மாணவிகளை பிக் அப், டிராப் செய்யும் பணிக்கு, மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் செவர்லே டவேரா ஆகிய கார்களை தலைமை ஆசிரியர் அன்புச்செல்வம் தேர்வு செய்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

இவ்விரு கார்களிலும் அதிகம் பேர் பயணிக்க முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதில், மாருதி சுஸுகி வேகன்ஆர் குறித்த அறிமுகமே தேவையில்லை. இந்திய மார்க்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக வேகன்ஆர் திகழ்கிறது.

பட்ஜெட் விலையில் நல்ல கார் எதிர்பார்ப்பவர்களுக்கு மாருதி சுஸுகி வேகன்ஆர் அருமையான தேர்வு. இந்த சூழலில், புதிய தலைமுறை வேகன்ஆர் காரை, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது.

புதிய ஹார்ட்டெக்ட் (Heartect) பிளாட்பார்ம் அடிப்படையில், 2019 வேகன்ஆர் உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்து டைமன்சன்களிலும், முன்பை காட்டிலும் பெரியதாக வந்துள்ளது. எனவே புதிய தலைமுறை வேகன்ஆர் காரில் போதுமான அளவிற்கு நல்ல இடவசதி கிடைக்கிறது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் புதிய மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் கிடைக்கிறது.

4.19 லட்ச ரூபாய் முதல் 5.69 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

புதிய வேகன்ஆர் காரில், மேனுவல், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 12 வேரியண்ட்கள் மற்றும் 6 வண்ணங்களில் 2019 மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய கார் மார்க்கெட்டில் செவர்லே நிறுவனம் அவ்வளவாக பிரபலம் கிடையாது. ஆனால் அந்நிறுவனத்தின் டவேரா புகழ்பெற்ற மாடலாகதான் திகழ்ந்தது. மஹிந்திரா பொலிரோ மற்றும் டாடா சுமோ உள்ளிட்ட கார்களுக்கு டவேரா விற்பனையில் கடும் சவாலை அளித்து வந்தது.

குஜராத் மாநிலம் ஹாலோல் என்னும் இடத்தில் உள்ள தொழிற்சாலையில் டவேரா கார்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் நாளடைவில் டவேரா கார்களின் விற்பனை கடுமையாக சரிந்தது. இதனால் அதன் உற்பத்தி மற்றும் விற்பனை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது.

தற்போது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மட்டுமே டவேரா கார்கள் கிடைக்கின்றன. அதிலும் அரிதாகதான் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








