மிக கடுமையான எதிர்ப்புகளை மீறி அதிரடியான முடிவை எடுக்கிறது மத்திய அரசு? என்னவென்று தெரியுமா?
மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலில், அதை மீறி அதிரடியான முடிவை மத்திய அரசு எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளது. கார் மற்றும் பைக் என அனைத்து விதமான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது. மாருதி சுஸுகி, ராயல் என்பீல்டு என அனைத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

விற்பனை சரிவு காரணமாக அனைத்து நிறுவனங்களும் வாகனங்களின் உற்பத்தியை குறைத்து கொண்டே வருகின்றன. இதனால் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு, பொருளாதார மந்த நிலை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் ஊக்கம் உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

எனவே மத்திய அரசு உடனடியாக உதவி செய்து, ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான முக்கிய அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார். ஆனால் ஆட்டோமொபைல் துறையினர் தீவிரமாக வலியுறுத்தி வரும் ஜிஎஸ்டி குறைப்பு என்ற கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைத்தால், அவற்றின் விலை கணிசமாக குறையும் எனவும், இதன் மூலம் விற்பனை அதிகரித்து ஆட்டோமொபைல் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் வதேரா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார்.

தற்போது இந்த கோரிக்கைக்கு செவி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் நடப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதில், ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், கார் மற்றும் பைக் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் பரிந்துரைகளை செய்தால், அதனை கேரளா மிக கடுமையாக எதிர்க்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது எந்த விதத்திலும் உதவி செய்யாது எனவும், அதற்கு மாறாக மாநிலங்களுக்கு இது வருவாய் இழப்பைதான் ஏற்படுத்தும் என கேரள மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த திட்டத்திற்கு (ஜிஎஸ்டி வரியை குறைப்பது) நான் ஆதரவு அளிக்க மாட்டேன்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசால் ஈடுகட்டி கொள்ள முடியும். ஆனால் இது எங்களால் இயலாத காரியம்'' என்றார். இதுகுறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மேலும் கூறுகையில், அதிகப்படியான வரி காரணமாகதான் ஆட்டோமொபைல் துறையில் டிமாண்ட் குறைந்துள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?

உண்மையில் வரி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 28 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாதத்தை நான் நம்பவில்லை'' என்றார். இதுபோன்ற கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா? அல்லது குறைக்கப்படாதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








