விஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட தந்தை ஒருவர், விஸ்வாசம் அஜீத்தையே விஞ்சியுள்ளார். தன் குழந்தைகளுக்காக அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

குழந்தைகளின் முதல் ஹீரோ பெற்றோர்கள்தான். தங்களது பெற்றோர்களை பின்பற்றிதான் குழந்தைகள் வளர்கின்றனர். எனவே குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்காக பெற்றோர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இதில், ஒரு சில பெற்றோர்கள் செய்யும் செயல்கள் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விடுகின்றன. இந்த வகையில் அருண்குமார் புருஷோத்தமன் என்பவர் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக செய்த செயல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்துள்ளது.

கடவுளின் சொந்த தேசமாக வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்தான் அருண்குமார் புருஷோத்தமன். இவர் அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில், ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

தனது குழந்தைகள் மீது அருண்குமார் புருஷோத்தமன் மிகுந்த பாசம் கொண்டவர். எனவே குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்து கொண்டே இருந்தார்.

அப்போது குழந்தைகள் ஓட்டுவதற்காக மினி ஆட்டோ ரிக்ஸா ஒன்றை உருவாக்கி கொடுத்தால் என்ன? என்ற சிந்தனை அவருக்குள் உதித்தது. யோசனையுடன் நின்று விடாமல், மினி ஆட்டோ ரிக்ஸாவை உருவாக்கும் பணியில் உடனடியாக களமிறங்கினார் அருண்குமார் புருஷோத்தமன்.

தன் வழக்கமான பணிகளுக்கு மத்தியிலும், அவ்வப்போது கிடைக்கும் நேரத்தை ஒதுக்கி, மினி ஆட்டோ ரிக்ஸாவை உருவாக்கும் பணியில் அருண்குமார் புருஷோத்தமன் ஈடுபட்டு வந்தார். இதன்படி சுமார் 7.5 மாதங்கள் அவர் மிக கடுமையாக உழைத்தார்.

இதன் விளைவாக, ஆச்சரியம் அளிக்கும் வகையிலான வசதிகளுடன் கூடிய மினி ஆட்டோ ரிக்ஸாவை அவர் உருவாக்கி விட்டார். இது பார்ப்பதற்கு அப்படியே வழக்கமான பஜாஜ் ஆர்இ ஆட்டோவை (Bajaj RE Auto) போலவே உள்ளது.

தற்போது அருண்குமார் புருஷோத்தமனின் குழந்தைகள், தங்கள் தந்தை உருவாக்கி கொடுத்த மினி ஆட்டோ ரிக்ஸாவை ஓட்டி விளையாடி கொண்டிருக்கின்றனர். இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் அசத்தலாக உள்ளன.

இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவில், லைட், ஹாரன், இன்டிகேட்டர், வைப்பர்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே ஸ்விட்ச்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மொபைல் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டமும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஆனால் இது வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களை போல் கிடையாது. இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்க கூடிய மினி ஆட்டோ ரிக்ஸா ஆகும். இதில், 24 வோல்ட் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் (24V DC Electric Motor) பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோவின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு 12 வோல்ட் பேட்டரிகளில் (12V Batteries) இருந்து இந்த மோட்டாருக்கு பவர் கிடைக்கிறது. அருண்குமார் புருஷோத்தமன் உருவாக்கியுள்ள மினி ஆட்டோ ரிக்ஸாவின் மொத்த எடை 60 கிலோ மட்டுமே. ஆனால் இதில் 150 கிலோ வரையிலான எடையை ஏற்றி செல்ல முடியும்.

இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவை உருவாக்கியவது எப்படி? அது எவ்வாறு செயல்படுகிறது? போன்ற விரிவான தகவல்கள் அடங்கிய வீடியோவை அருண்குமார் புருஷோத்தமன் வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மினி ஆட்டோ ரிக்ஸாவில் முதலுதவி பெட்டி ஒன்றையும் அருண்குமார் புருஷோத்தமன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை உருவாக்க செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு? என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை.

தற்போது கேரள மாநிலத்தை கடந்து நாடு முழுவதும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவை, அருண்குமார் புருஷோத்தமனின் குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஓட்டி விளையாடி கொண்டிருக்கின்றனர். இது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தில், மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட கதாபாத்திரத்தில் தல அஜீத் நடித்துள்ளார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி வாழ்ந்து வருகிறார் அருண்குமார் புருஷோத்தமன்.

குழந்தைகள் மீது கொண்ட பாசத்திற்காக, பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய மினி ஆட்டோ ரிக்ஸாவை, கடும் சிரமங்களுக்கு இடையே உருவாக்கிய அருண்குமார் புருஷோத்தமனுக்கும், அவரது மனைவிக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பணியில், அருண்குமார் புருஷோத்தமனின் மனைவியுடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








