தமிழகத்தை உதறி விட்டு ஆந்திராவில் கால் பதித்தது கியா... தீபாவளிக்கு வரும் புதிய காரின் விலை இதுதான்
லஞ்சம் கேட்ட தமிழகத்தை உதறி தள்ளி விட்டு, ஆந்திர மாநிலத்தில் கெத்தாக கால் பதித்துள்ளது கியா மோட்டார்ஸ் நிறுவனம். தீபாவளிக்கு வெளிவரவுள்ள அந்நிறுவனத்தின் முதல் காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென் கொரியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று கியா மோட்டார்ஸ் (Kia Motors). ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில் 2வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக கியா மோட்டார்ஸ் திகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை திறக்க விரும்பியது. இதற்காக தமிழகத்தைதான் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்தது. ஆனால் இதற்கு தமிழக ஆட்சியாளர்கள் அதிகப்படியான லஞ்சம் கேட்டதாக சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு இடையே கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சென்றது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடு கை நழுவி போனது. இதன்பின் ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் கியா மோட்டார்ஸ், அனந்த்ப்பூர் பகுதியில் தொழிற்சாலை அமைக்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் செயல்பட்டு வரும் ஆந்திர பிரதேச அரசுடன் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்பின் 2017ம் ஆண்டு இறுதியில் தொழிற்சாலை கட்டுமான பணிகள் தொடங்கின. பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்ற காரணத்தால், திட்டமிடப்பட்டதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு விட்டது.

உலக அளவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அமைத்திருக்கும் 15வது பிளாண்ட் இதுவாகும். 536 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நேரடியாக 1,300 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்த தொழிற்சாலை ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இந்த திறன் வரும் 2020ம் ஆண்டில்தான் எட்டப்படும். அப்போது இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை 3,000ஆக உயரும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த வாகனங்களில் 90 சதவீத வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். எஞ்சிய 10 சதவீத வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சூழலில் அனந்த்பூர் தொழிற்சாலையில், ட்ரையல் புரொடெக்ஸன் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கியா இந்தியா எம்டி மற்றும் சிஇஓ கோஹியும் ஷிம், இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஷின் போங்கில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொழிற்சாலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் முதல் கார் எஸ்பி2ஐ (SP2i) ஆகும். இதற்கான ட்ரையல் புரொடெக்ஸன்தான் தற்போது தொடங்கியுள்ளது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும்.

எஸ்பி2ஐ என்பது தற்போதைக்கு சூட்டப்பட்டிருக்கும் இடைக்கால பெயராகும். இதன் புரொடெக்ஸன் நேம் (Production Name) கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால், அடுத்த சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்பி2ஐ எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் நடப்பாண்டின் 2வது பாதியில் முழு வீச்சில் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்பின் வரும் பண்டிகை காலத்தில் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக தீபாவளி பண்டிகை சமயத்தில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் தயாரிப்பான எஸ்பி2ஐ எஸ்யூவி காரை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.9 லட்சம் முதல் ரூ.16 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எஸ்பி கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டுதான் இந்த கார் உருவாக்கப்படவுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் எதிர்காலத்தில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பி2ஐ எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஹூண்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும்.

இந்த காரை அறிமுகம் செய்த பிறகு மேலும் 2 கார்களை கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆக மொத்தத்தில் அடுத்த 18 மாதங்களில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3 கார்கள் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








