ஜீப் மற்றும் ஃபியட் கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்
ஜீப் காம்பஸ் உள்ளிட்ட ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய கார் சந்தையில் பல புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய கார்களை சொந்தமாக வாங்குவதற்கு பதிலாக குத்தகை அடிப்படையில் சில ஆண்டுகள் வாங்கி பயன்படுத்தும் திட்டம் டிரென்ட் ஆகி வருகிறது.

இதனை மனதில் வைத்து மஹிந்திரா, ஸ்கோடா, ஹூண்டாய் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை அண்மையில் அறிவித்தன. மேலும், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் கார்களை அறிமுகம் செய்யும்போதே, குத்தகை திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த வரிசையில், ஃபியட் க்றைஸ்லர் இந்தியா குழுமம் தற்போது குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜீப் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜீப் மற்றும் ஃபியட் கார்களை குத்தகை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெற்று பயன்படுத்த முடியும்.

டவுண்பேமண்ட் உள்ளிட்டவை இல்லாமல் குறிப்பிட்ட மாதாந்திர கட்டணத்தை செலுத்தி இந்த குத்தகை திட்டத்தில் புதிய கார்களை எடுத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து குறுகிய காலம் தங்கி செல்வோர் மற்றும் அடிக்கடி புதிய கார்களை மாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓரிக்ஸ் நிறுவனத்துடன் ஃபியட் க்றைஸ்லர் இந்தியா குழுமம் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. இதே நிறுவனம்தான் மஹிந்திரா, ஸ்கோடா கார்களின் குத்தகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

தற்போது கார்ப்பரேட் மற்றும் தொழிலதிபர்கள் அளவில் இந்த திட்டம் பிரபலமாக உள்ளது. இதனை சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டு செல்லும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக ஓரிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த குத்தகை திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை கார்களை எடுத்து பயன்படுத்தலாம்.

புதிய காரை கடனில் வாங்கும்போது கொடுக்கும் மாதத் தவணையை விட குத்தகை திட்டத்திற்கான மாதாந்திர கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், டவுன்பேமண்ட், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது.

முதல் கட்டமாக ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்தின் குத்தகை திட்டமானது மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற நகரங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








