பாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...
பாஜக எம்எல்ஏ வீடு அருகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடந்ததாக பரபரப்பு புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவின் 17வது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கும் கட்சி எது? அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விகளுக்கு ஏறக்குறைய அன்றைய தினம் விடை தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

கூட்டணிகளுக்கிடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவிக்கும் படலமும் தொடங்கி விட்டது. தேர்தலை எவ்வித பிரச்னையும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான பணிகளில், தேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற பொது மற்றும் இடைத்தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM- Electronic Voting Machine) பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கே வாக்கு விழும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுகிறது என்பதே குற்றச்சாட்டு.

ஆனால் இந்த புகார்களை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அத்துடன் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்வதற்காக, விவிபேட் (VVPAT- Voter Verifiable Paper Audit Trail) கருவிகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 5 மாநில தேர்தலில், மற்றொரு பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்கு அருகே உள்ள குடியிருப்பில், மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

அத்துடன் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள், சாலைகளில் கிடந்ததாகவும் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. எனவே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க தற்போது தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், கட்டாயமாக ஜிபிஎஸ் டிராக்கர் (GPS Tracker) பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் இயக்கத்தை கண்காணிப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் இயக்கத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நாம் பயன்படுத்தும் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு கூட ஜிபிஎஸ் டிராக்கர் அவசியமான ஒன்றுதான்.

குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த கார், பைக் போன்ற வாகனங்களுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் மிகவும் அத்தியாவசியமானது. ஜிபிஎஸ் டிராக்கர் மூலமாக வாகனம் எங்கே உள்ளது? எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது? என்ற தகவல்களை நம்மால் எளிதாக பெற முடியும். வாகனங்கள் திருடப்பட்டு விட்டால், அந்த சமயங்களில் ஜிபிஎஸ் டிராக்கர் கை கொடுக்கும்.

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில், பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக் ஒன்று திருடு போனது. பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கானது, ரூ.1-1.12 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்பதால், அந்த பைக்கின் உரிமையாளர் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தியிருந்தார்.

இதன் உதவியுடன் பைக் எங்கே இருக்கிறது? என கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. அத்துடன் பைக்கை திருடிய கொள்ளையர்களும் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கார், பைக் போன்ற வாகனங்களுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் எவ்வளவு அவசியம்? என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.

ஒரு சிலர் ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ்களின் விலை அதிகம் எனக்கருதி அவற்றை தங்கள் வாகனங்களில் பொருத்தாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் சென்னையில் திருடப்பட்டு மீட்கப்பட்ட பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் டிராக்கரின் விலை வெறும் 1,500 ரூபாய் மட்டுமே.

இதுபோல் நல்ல தரமான அதே சமயம் மிகவும் விலை மலிவான ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ்கள் மார்க்கெட்டில் கிடைத்து வருகின்றன. வாகன திருட்டு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், உங்கள் வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ்களை பொருத்தி கொள்வது நல்லது.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








