நடுரோட்டில் அசிங்கப்பட்ட காங்., நிர்வாகி.. மோடிக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தியதால் வந்த வினை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், பிரதமருக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தியதால் நடுரோட்டில் அசிங்கப்பட்டார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றது. 5 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில், மத்திய அரசின் பதவிக்காலம் வெகு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. எனவே வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் தேதிகளை வரும் மார்ச் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்னும் ஒரு சில வாரங்களில், நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விடும்.

எனவே நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜகவும், பாஜகவிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க காங்கிரசும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

அதே சமயம் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியாவின் பொது தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதால், தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையமும் தற்போது முடுக்கி விட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி, முறையற்ற நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் எதுவும் சாலைகளில் பயணம் செய்யக்கூடாது.

பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் கட்சியின் சின்னம் மற்றும் தலைவர்களின் உருவப்படங்களை நம்பர் பிளேட்டில் பதித்துள்ளனர். இவைதான் முறையற்ற நம்பர் பிளேட்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நம்பர் பிளேட் கொண்ட எந்த வாகனமும் சாலையில் உலா வரக்கூடாது என்றுதான் தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. நம்பர் பிளேட்களில் வாகனங்களின் பதிவு எண் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். இதை தவிர வேறு எதுவும் இருக்க கூடாது.

அதாவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி மட்டுமே நம்பர் பிளேட் இருக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி மட்டுமே நம்பர் பிளேட் இருக்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. என்றாலும் இதனை மீறும் வாகன ஓட்டிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் தற்போது தேர்தல் நெருங்குவதன் காரணமாக, இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தி சோதனையிடப்பட்டு வருகின்றன. அப்போது அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்களுடன் கூடிய நம்பர் பிளேட்கள் கண்டறியப்பட்டால், அவை அகற்றப்படுகின்றன.

அத்துடன் அத்தகைய நம்பர் பிளேட்களை பொருத்தியிருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தூர் நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்காக மூத்த அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிண்டு ஷோக்ஸி என்பவர், இந்தூர் நகரில் தனது மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் (Mitsubishi Pajero Sport) காரில் வந்து கொண்டிருந்தார். இது எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும்.

இதனிடையே வாகன தணிக்கை நடைபெற்று கொண்டிருப்பதை கவனித்த சிண்டு ஷோக்ஸி, அதிகாரிகளை பார்ப்பதற்காகவும், பணிகளை பார்வையிடுவதற்காகவும் காரை நிறுத்தினார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசி விட்டு புறப்பட தயாரானார்.

அப்போது சிண்டு ஷோக்ஸியின் காரில் சைரன்கள் பொருத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் காரின் மேல்பகுதியில் இருந்த சைரன்களை அவர்கள் உடனடியாக அகற்றினர். இந்தியாவில் தனியார் வாகனங்களில் (Private Vehicles) சைரன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில், அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு ஊர்திகள் மற்றும் போலீஸ் ரோந்து வாகனங்கள் ஆகியவற்றில் மட்டுமே சைரன்களை பயன்படுத்த முடியும். சைரன்களை வேறு யார் பயன்படுத்தினாலும், அது சட்ட விரோதமானதாகதான் கருதப்படும்.

விஜபி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காகதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமருக்கு கூட சைரன் பயன்படுத்தும் அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது சட்ட விரோதம் என சிண்டு ஷோக்ஸியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இதன்பின்னர் அவரது காரில் இருந்த சைரனையும் அதிகாரிகள் அகற்றினர். பணிகளை பார்வையிட வந்து தானாக சிக்கி கொண்டுள்ளார் சிண்டு ஷோக்ஸி. ஆனால் இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சைரனை அகற்ற அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுதான்.

ஆனால் ஒரு மிகப்பெரிய கட்சியின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு, விதிகளை மீறி அவர் சைரன் பயன்படுத்தியது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் சைரன் பயன்படுத்த கூடாது என்ற விதி கூட தெரியாதா? எனவும் சிண்டு ஷோக்ஸியை நோக்கி கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. சிண்டு ஷோக்ஸியின் காரில் சைரன்களை அகற்றும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சூழலில் சிண்டு ஷோக்ஸிக்கு அபராதம் விதிக்கப்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதனிடையே லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இனி நாடு முழுவதும் இத்தகைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








