தேர்தல் முடிந்த உடனே மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய மத்திய அரசு... கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
தேர்தல் முடிந்த உடனேயே மத்திய அரசு மீண்டும் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாத தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இதற்கு நாடாளுமன்ற தேர்தலே முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே 23ம் தேதி நடைபெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில் தேர்தல் முடிந்த உடனேயே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகளுடன் சேர்த்து, பொது மக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடன் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும், பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 70 முதல் 80 பைசா வரை உயர்ந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததற்கு மறுநாள் முதல், அதாவது கடந்த மே 20ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு கடந்த மே 19ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட இந்த 9 நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 73 பைசாவும் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் விலை அறிவிப்பு மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

தலைநகர் டெல்லியில் கடந்த மே 19ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71.03 ரூபாயாக இருந்தது. இது தற்போது ஒரு லிட்டருக்கு 71.86 ரூபாயாக (நேற்றைய மே 28ம் தேதி நிலவரப்படி) அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டருக்கு 83 பைசா உயர்ந்துள்ளது.

அதே சமயம் தலைநகர் டெல்லியில் கடந்த மே 19ம் தேதியன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 65.96 ரூபாயாக இருந்தது. இது தற்போது 66.69 ரூபாயாக (நேற்றைய மே 28ம் தேதி நிலவரப்படி) உயர்ந்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசலின் விலை 73 பைசா உயர்ந்துள்ளது.

இருந்தபோதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சமயங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை அவை ஏற்கனவே தவிர்த்துள்ளன. ஆனால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் விலை உயர்த்தப்படும். இதற்கு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு சிறந்த உதாரணம்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 5 டாலர்கள் வரை உயர்ந்தது. ஆனால் இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்னதாக சுமார் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்பு உடனடியாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை மிக கடுமையாக உயர்த்த தொடங்கின.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதும் கூட எண்ணெய் நிறுவனங்கள் இதே பாணியை கையாண்டன. அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை திருத்தியமைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 14 நாட்கள் நிறுத்தின.


Click it and Unblock the Notifications








