கற்பனைக்கு எட்டாத மிக குறைவான விலையில் வருகிறது பிரம்மாண்ட ரெனால்ட் கார்... போட்டியாளர்கள் நடுக்கம்
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிக குறைவான விலையில் பிரம்மாண்ட கார் ஒன்றை ரெனால்ட் நிறுவனம் களமிறக்கவுள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் வாயடைத்து போயுள்ளன.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது. உலகின் பல்வேறு இடங்களில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும் கூட, இந்திய மார்க்கெட்டில் மட்டும் ரெனால்ட் நிறுவனம் ஏனோ தத்தளித்து கொண்டுள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஒரே கார் க்விட் (Kwid) மட்டுமே. இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் அது நிச்சயமாக க்விட்தான்.

ஆனால் ஒரே ஒரு தயாரிப்பை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாளுக்குதான் காலம் தள்ள முடியும்? பல்வேறு புதிய புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டே இருந்தால் மட்டுமே போட்டி நிறைந்த இந்திய சந்தையில் தாக்கு பிடிக்க முடியும்.

நிலைமை இப்படி இருக்க, ரெனால்ட் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக எந்தவொரு பெரிய தயாரிப்பையும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவே இல்லை. இந்த சூழலில் க்விட் காரின் புகழும் நாளுக்கு நாள் மங்கி கொண்டே செல்கிறது.

சர்வதேச அளவில் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. ரெனால்ட் நிறுவனத்தை போல நிஸான் நிறுவனமும் இந்திய மார்க்கெட்டில் திணறி கொண்டுதான் இருந்தது.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதியன்று, நிஸான் அறிமுகம் செய்த கிக்ஸ் பிரீமியம் எஸ்யூவி (Kicks Premium SUV) விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. கிக்ஸ் காருக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் நிஸான் நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர கிக்ஸ் கார் உதவும் என உறுதியாக நம்பப்படுகிறது. எனவே நிஸான் பாணியில், ரெனால்ட் நிறுவனமும் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வேண்டிய கட்டாயமான சூழல் நிலவுகிறது.

எனவே எண்ட்ரி லெவல் எம்பிவி செக்மெண்ட்டில் (Entry-level MPV segment), புத்தம் புதிய கார் ஒன்றை களமிறக்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய காருக்கு தற்போதைக்கு ஆர்பிசி (RBC) என்ற குறியீட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் மத்தியில், ரெனால்ட் ஆர்பிசி விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 பேர் சௌகரியமாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில், 7 சீட்டர் மாடலாக ரெனால்ட் ஆர்பிசி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மாருதி சுஸுகி எர்டிகாதான் (Maruti Suzuki Ertiga), ரெனால்ட் ஆர்பிசி காரின் நேரடி போட்டியாளராக இருக்கும். ஆனால் எர்டிகாவை காட்டிலும் ரெனால்ட் ஆர்பிசி உருவத்தில் பெரியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அத்துடன் மிகவும் மலிவான விலையில்தான் ரெனால்ட் ஆர்பிசி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. அனேகமாக ரெனால்ட் ஆர்பிசி காரின் விலை 4.8 லட்ச ரூபாய்க்குள்தான் (எக்ஸ் ஷோரூம்) இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் மாருதி சுஸுகி எர்டிகாவை விட மிக மிக குறைவான விலையில் ரெனால்ட் ஆர்பிசி கிடைக்கும். எர்டிகா காரின் ஆரம்ப விலை சுமார் 7.44 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விலை மிக குறைவுதான் என்றாலும் பிரீமியமான வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என்றே தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி இன்னும் ஒரு சில மாதங்களில் ரெனால்ட் ஆர்பிசி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும். தற்போது ரெனால்ட் ஆர்பிசி கார், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்டர்நெட்டை ஒரு கலக்கு கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ரெனால்ட் ஆர்பிசி காரில், மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர் பாக்ஸ்கள் உடன் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஸ்டாண்டர்டான டிரைவர் சைடு ஏர் பேக், இபிடி உடனான ஏபிஎஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையிலான டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் இடம்பெறலாம்.

இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் மாடலாக ஆர்பிசி இருக்கும் என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்களின் கருத்து. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், ரெனால்ட் நிறுவனமும் உற்சாகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








