இனி அபராத செல்லாண் கிடையாது: அதற்கு பதிலாக வேறொரு ஆப்பு காத்திருக்கு... என்ன தெரியுமா அது..?
குறிப்பிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லாண் வழங்குவதற்கு பதிலாக வேறொரு தண்டனை வழங்க அந்த மாநில போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற வகையில், புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் 2019, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இதன் தாக்கமே இன்னும் மக்கள் மத்தியில் ஓயாத நிலையில், ஓர் மாநில அரசு, அதன் மக்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்ற வகையிலான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இனி நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக, அந்த வாகன ஓட்டிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பை பஞ்சாப் மாநிலத்தின், லூதியானா பகுதி காவல் ஆணையர் சிபி ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பினை லூதியானா போலீஸார், பிரிவு 144ன் கீழ் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த புதிய அறிவிப்பின்படி, குற்றத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை ஐபிசி பிரிவு 188-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்டவர் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் சிபி ராகேஷ் அகர்வால் கூறுகையில், "நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் மிக முக்கியமாக வாகனம் சார்ந்த விதிமீறல் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது" என்றார்.

அதேசமயம், பதிவெண் இல்லாமல் இயங்கும் வாகனங்களினால் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதன்காரணமாகவே, இந்த கடுமையான நடவடிக்கையை கையிலெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இந்த விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், புதிய மாற்றத்தின்படி, விதியை மீறுபவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட உள்ளது. இது, அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்க வழி வகுக்கும். ஆகையால், இதுபோன்ற முறைகேட்ட தவிர்க்க வேண்டும் என போலீஸார் ஒரு பக்கம் வலியுறுத்தி வருகினறனர்.

தொடர்ந்து, லூதியானா போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் போலி நம்பர் பிளேட் முறைகேடும் கணிசமாக குறைக்கப்படும் என தெரிகின்றது.

பெரும்பாலும், செயின் ஸ்நேட்சிங் மற்றும் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் திருட்டு வாகனத்தையும், போலி நம்பர் பிளேட் வாகனத்தையுமே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், நம்பர் பிளேட்டிற்கு எதிராக போலீஸார் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை, அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








