இதுபோல் நீங்களும் ஏமாற்றப்பட்டிருக்கலாம்... மோசடி செய்த டீலருக்கு தக்க பாடம் புகட்டிய வாடிக்கையாளர்
மோசடி செய்த கார் உற்பத்தி நிறுவனம் மற்றும் டீலருக்கு, வாடிக்கையாளர் ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் பகுதியை சேர்ந்தவர் குர்மெயில் சிங் ஷேக்கான். இவர் சண்டிகரில் உள்ள ஹர்பீர் ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற டீலர்ஷிப்பில், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கினார். இது மஹிந்திரா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஆகும். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று கார் வாங்கப்பட்டது.

இதற்காக குர்மெயில் சிங் ஷேக்கான் 13.77 லட்ச ரூபாயை செலுத்தினார். ஆனால் காரை வாங்கிய மறுநாளே, ப்ளோயர் கண்ட்ரோலர் வேலை செய்யவில்லை. இதுகுறித்து கார் வாங்கப்பட்ட டீலர்ஷிப்பில், குர்மெயில் சிங் ஷேக்கான் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட டீலர்ஷிப் பணியாளர்கள், பழுதை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.

இதன்பின் ஒரு சில நாட்கள் கழித்து, குர்மெயில் சிங் ஷேக்கான் காரை வாட்டர் சர்வீசுக்கு விட்டார். அப்போது காரின் மேற்கூரையில் (Roof), துருபிடித்திருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் மேற்கூரை சற்று வளைந்தும் போயிருந்தது. வாட்டர் சர்வீஸ் நிறுவன பணியாளர்கள் இதனை கண்டுபிடித்து குர்மெயில் சிங் ஷேக்கானிடம் தெரிவித்தனர்.

இதனால் குர்மெயில் சிங் ஷேக்கான் அதிர்ச்சியடைந்தார். கார் உற்பத்தி நிறுவனமும், டீலரும் இணைந்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கருதினார். இதனால் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதியன்று, இ-புகார் ஒன்றை குர்மெயில் சிங் ஷேக்கான் பதிவு செய்தார். ஆனால் இதற்காக அவருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

அத்துடன் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் சண்டிகரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் குர்மெயில் சிங் ஷேக்கான் இது தொடர்பாக முறையிட்டார். அப்போது காரின் மேற்கூரையில் துரு மற்றும் வளைவு இருப்பது குறித்து டீலருக்கு அனுப்பிய மெயிலை அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புகைப்பட ஆதாரங்களையும் அவர் சமர்பித்திருந்தார். இவற்றை எல்லாம் கூர்ந்து ஆராய்ந்ததில், காரின் மேற்கூரை பெயிண்ட்டில் ஒருவித கடின தன்மை மற்றும் டெண்ட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குர்மெயில் சிங் ஷேக்கான் முன் வைத்த குற்றச்சாட்டு கார் வாங்கிய 18 நாட்களுக்கு பின்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் காரின் மேற்கூரையில் ரீ-பெயிண்ட் செய்து கடின தன்மையை அகற்றி தருவதாக கார் உற்பத்தியாளர் மற்றும் டீலர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் குர்மெயில் சிங் ஷேக்கான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக காரை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதனை நுகர்வோர் குறைதீர் மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் குர்மெயில் சிங் ஷேக்கானின் கார் 25 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியிருந்தது. இருந்தபோதும் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்காக, கார் உற்பத்தி நிறுவனம் மற்றும் டீலர் ஆகிய இருவரும் இணைந்து, குர்மெயில் சிங் ஷேக்கானுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் சேர்த்து, ரூ.60 ஆயிரமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ET Auto செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only


Click it and Unblock the Notifications








