இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் வெர்ஷன்...
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பெட்ரோல் வெர்ஷன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

9.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற மிகவும் சவாலான ஆரம்ப விலையில், மராஸ்ஸோ 7 சீட்டர் எம்பிவி காரை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா நிறுவனத்திற்கு மராஸ்ஸோ கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் இன்ஜின் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு வருகின்றன. போதாக்குறைக்கு வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக டீசல் கார்களின் விலை அதிகரித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை அடுத்த 3-4 மாதங்களுக்கு உள்ளாக பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான இன்ஜின் அறிமுகம் செய்யும் பணிகளை தொடங்கி விடும். இந்த வகையில் எக்ஸ்யூவி300தான் பிஎஸ்-6 இன்ஜினை பெறும் முதல் மஹிந்திரா காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய மராஸ்ஸோ காரையும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ம் ஆண்டின் இறுதியில் மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.2 லிட்டர் முதல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வரை புதிய பெட்ரோல் இன்ஜின்களை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் 1.2 லிட்டர் டி-ஜிடிஐ இன்ஜின் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ளது. இது எக்ஸ்யூவி300 காரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மஹிந்திரா மராஸ்ஸோ கார் புதிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கலாம்.

தற்போதைய மஹிந்திரா மராஸ்ஸோ காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலமாக இன்ஜின் சக்தி முன் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது.

புதிய பெட்ரோல் இன்ஜின்கள் மட்டுமல்லாது, புத்தம் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினை உருவாக்கும் பணியிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்த தலைமுறை தார், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களில் இந்த பிஎஸ்-6 இன்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








