புதிய மஹிந்திரா மார்க்ஸ்மேன் புல்லட் புரூஃப் வாகனம் சோதனை ஓட்ட வீடியோ!
பாதுகாப்புப் படையினர் பயன்பாட்டிற்கான புதிய மஹிந்திரா மார்க்ஸ்மேன் புல்லட் புரூஃப் வாகனம் சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் தாக்குதல்களின்போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட புல்லட் புரூஃப் எஸ்யூவி வாகனத்தை மஹிந்திரா உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

மஹிந்திரா மார்க்ஸ்மேன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த குண்டுதுளைக்காத எஸ்யூவி ரக வாகனம் மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிவிரைவு படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மார்க்ஸ்மேன் வாகனத்தை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது.

கூடுதல் இடவசதியுடன் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் மார்க்ஸ்மேன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த இந்த வாகனத்தை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் தீவிர வாசகரும், புகைப்படக் கலை ஆர்வலருமான ஜெயசூர்யா படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

மேலும், தற்போது உள்ள 2.5 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சினுக்கு பதிலாக புதிய பிஎஸ்-6 டீசல் எஞ்சின் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள மார்க்ஸ்மேன் வாகனத்தில் ஓட்டுனர் உள்பட 6 வீரர்கள் அமர்ந்து துப்பாக்கியால் சுடும் இடவசதியையும், கட்டமைப்பு வசதியையும் பெற்றிருக்கிறது. இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் எந்திர துப்பாக்கிகள் 270 டிகிரி கோணத்தில் சுடும் வாய்ப்பை வழங்கும்.

இந்த வாகனத்தில் பின்னால் இருக்கும் தடைகள் மற்றும் எதிரிகளை கண்காணிப்பதற்கான ரியர் வியூ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் முன்னால் ஓட்டுனர் மற்றும் மற்றொரு வீரரும், பின்னால் 4 வீரர்களும் அமர்ந்து கொள்ள முடியும்.

இந்த வாகனத்தில் சக்திவாய்ந்த துப்பாக்கி தாக்குதல்களையும் தாங்கும் வகையில் மிக வலிமையான வெளிப்புற சுவருடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் வாகனத்தில் வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் உட்புறத்தில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது.

ராணுவ விதிகளின்படி, இந்த வாகனத்தின் எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 228 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு தக்கவாறு இதன் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்பதுடன், இதே அளவு திறனை வெளிப்படுத்தும். 5 ஸபீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஜெயசூர்யா போன்று ஸ்பை படங்கள் மற்றும் ஸ்பை வீடியோக்களை எங்களுக்கு அனுப்ப விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். உங்களது பெயர் விபரத்துடன் பதிவு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








