சாங்யாங் கொரண்டூ எஸ்யூவியை இந்தியா கொண்டு வருகிறது மஹிந்திரா?
சாங்யாங் கொரண்டூ எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மஹிந்திரா நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான தென்கொரிய நிறுவனமான சாங்யாங் மோட்டார் தற்போது மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவியை அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் மஹிந்திரா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது.

அதேபோன்று, சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 மாடலும் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாங்யாங் பிராண்டின் மிகவும் பிரபலமான கொரண்டு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் புதிய தலைமுறை சாங்யாங் கொரண்டூ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்சைஸ் ரக எஸ்யூவி மாடலாக பிரிமீயம் அம்சங்களை பெற்றுள்ளது. அப்போதே வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில், கடுமையான சந்தைப் போட்டி நிலவும் இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சாங்யாங் கொரண்டூ எஸ்யூவி ரகத்திலான மாடலை களமிறக்குவது மஹிந்திரா நிறுவனத்திற்கு அவசியமாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக சாங்யாங் கொரண்டூ எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பரிமாணங்களை ஒப்பிடும்போது, சாங்யாங் கொரண்டூ எஸ்யூவி அளவில் சிறிய மாடலாக இருக்கும்.

எனவே, முற்றிலுமாக சாங்யாங் கொரண்டூவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி இருக்கும். புதிய ரக மாடலாக அறிமுகம் செய்யப்படுமா அல்லது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக களமிறக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

புதிய சாங்யாங் கொரண்டூ எஸ்யூவியில் புதிதாக உருவாக்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, மஹிந்திரா இதுகுறித்து தீவிரமாக பரீசிலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா கொரண்டூ எஸ்யூவியில் 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஏழு ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது. ஒருவேளை இந்தியா கொண்டுவரப்பட்டால், இது பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.
Source - Gaadiwaadi


Click it and Unblock the Notifications








