மக்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் வாங்கிய புதிய கார் இதுதான்... இதில் என்ன இருக்கிறது தெரியுமா?
பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக போலீசார் புதிய கார்களை வாங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு மாநில போலீஸ் படைகள் மஹிந்திரா நிறுவன கார்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. இதில், மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா தார் ஆகிய இரண்டு கார்களும் குறிப்பிடத்தகுந்தவை. போலீஸ் படைகளை எடுத்து கொண்டால், மஹிந்திரா டியூவி300 கார்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இது காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திர பிரதேச மாநில போலீஸ் படைகள் மஹிந்திரா டியூவி300 கார்களை பயன்படுத்தி வருகின்றன. இது தவிர மும்பை போலீஸ் படையிலும் கூட, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 195 மஹிந்திரா டியூவி300 கார்கள் சேர்க்கப்பட்டன. மஹிந்திரா டியூவி300 கார்களை போலீசார் ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கொல்கத்தா போலீஸ் படையிலும் தற்போது மஹிந்திரா டியூவி300 கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கொல்கத்தா போலீசார் மொத்தம் 58 யூனிட்களை வாங்கியுள்ளனர். இந்த 58 கார்களும் கொல்கத்தா நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தங்கள் குடிமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொல்கத்தா போலீசார் இந்த கார்களை வாங்கியுள்ளனர்.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அனுஜ் ஷர்மா முன்னிலையில் இந்த புதிய கார்கள் அனைத்தும் சேவையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. புதிய கார்கள் இணைக்கப்பட்டுள்ளது குறித்து கொல்கத்தா போலீசார் கூறுகையில், ''ரோந்து அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள இந்த கார்கள் மூலமாக கொல்கத்தா நகரின் பாதுகாப்பு வலுவாகும் என நாங்கள் நம்புகிறோம்'' என்றனர்.

ஷோரூம்கள் வாயிலாக சாதாரண மக்களுக்கு விற்பனை செய்யப்படும் கார்களில் என்ன வசதிகள் இடம்பெற்றுள்ளனவோ அதே வசதிகள்தான் போலீசார் வாங்கியுள்ள கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன. டிசைனும் கூட ஒன்றாகதான் உள்ளது. ஆனால் குற்றங்களை குறைக்கவும், உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு போலீசார் உதவவும் தேவையான ஒரு சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா போலீசார் வாங்கியுள்ள 58 மஹிந்திரா டியூவி300 கார்களின் எக்ஸ்டீரியரும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கம், பின் பக்கம், பக்கவாட்டு பகுதி மற்றும் விண்டு ஸ்க்ரீன் ஆகிய இடங்களில் கொல்கத்தா போலீசாரின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ப்ளாஷிங் லைட்ஸ் மற்றும் சைரன் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பிஏ (PA - Public Announcement) சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக தேவைப்படும் நேரங்களில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவிப்புகளை செய்யலாம். T4+ எனும் பேஸ் டிரிம்மைதான் கொல்கத்தா போலீசார் வாங்கியுள்ளனர். இந்த வேரியண்ட்டின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 8.60 லட்ச ரூபாய்.

இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 எச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவை ரியர் வீல் டிரைவ் கார்கள் ஆகும். ஒரு லிட்டருக்கு 18.49 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.

இந்த வேரியண்ட்டில் மஹிந்திரா நிறுவனம், ட்யூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, சென்ட்ரல் லாக்கிங், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஏசி, பவர் விண்டோஸ், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எரிபொருள் குறைவாக இருந்தால் எச்சரிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதுபோல் இன்னும் பல்வேறு வசதிகள் இந்த காரில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








