இந்தியர்களை கவர்ந்த பாதுகாப்பான மஹிந்திரா காரின் புதிய அசத்தல் இதுதான்... என்னவென்று தெரியுமா?
இந்தியர்களை கவர்ந்த பாதுகாப்பான மஹிந்திரா கார் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய மார்க்கெட்டின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிகவும் சவால் நிறைந்தது.

இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு போட்டியாக களமிறங்கிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 லான்ச் செய்யப்பட்டது முதலே விற்பனையில் அசத்த தொடங்கியது. மஹிந்திரா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரம் எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸானை பின்னுக்கு தள்ளி விட்டு, மஹிந்திரா எக்ஸ்யூவி300 இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தனது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான வெனியூவை கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் வெனியூ காரும் எடுத்த எடுப்பிலேயே விற்பனையில் அசத்த தொடங்கியது. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை பின்னுக்கு தள்ளி விட்டு, அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இதன் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. மஹிந்திரா நிறுவனம் 1.2 லிட்டர்- 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் எக்ஸ்யூவி300 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் ஸ்டாண்டர்டாக வழங்கியது.

அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த குறையை மஹிந்திரா நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. ஆம், எக்ஸ்யூவி300 காரின் டீசல் ஏஎம்டி வேரியண்ட்களை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் டீசல் இன்ஜினுடன் மட்டும் ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்யூவி300 காரின் W8 மற்றும் W8(O) ஆகிய இரண்டு வேரியண்ட்களில் ஏஎம்டி ஆப்ஷனை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. ஏஎம்டி வேரியண்ட்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எக்ஸ்யூவி300 காரின் விற்பனை இனி ஒரு மாதத்திற்கு 500 முதல் 1,000 யூனிட்கள் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வருங்காலத்தில் பெட்ரோல் வேரியண்ட்களும் ஏஎம்டி ஆப்ஷனை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் ரூஃப் முதல் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வரை பல்வேறு வசதிகள் எக்ஸ்யூவி300 காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த செக்மெண்ட்டிலேயே பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கார்களில் ஒன்றாகவும் எக்ஸ்யூவி300 திகழ்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் வீல் பேஸ் 2,600 மிமீ. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டிலேயே சிறந்த வீல்பேஸ் கொண்ட காராக எக்ஸ்யூவி300 உள்ளது. இந்த சிறப்பான வீல் பேஸ் மூலம் பின் இருக்கை பயணிகளுக்கு போதுமான இடவசதி கிடைக்கிறது. நல்ல இடவசதி, அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய காம்பேக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு எக்ஸ்யூவி300 நல்ல தேர்வு.

இந்த சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 தற்போது புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 25 ஆயிரம் எக்ஸ்யூவி300 கார்களை உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்கு உள்ளாக 25 ஆயிரம் எக்ஸ்யூவி300 கார்களை உற்பத்தி செய்து மஹிந்திரா நிறுவனம் அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








