300 கிமீ ரேஞ்ச்... அசத்த வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் உருவாக்கப்பட்டு வருவதாக மஹிந்திரா ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், இந்த கார் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் பயணிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பாவில் மஹிந்திரா நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி ஸ்டான்டர்டு மற்றும் எக்ஸ்டென்டடு என்ற இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. இதில், எக்ஸ்டென்டடு வெர்ஷனானது 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

இதன்மூலமாக, நீண்ட தூர பயணங்களுக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த காருக்கான லித்தியம் அயான் பேட்டரியை எல்ஜி கெம் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கி வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலில் க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படும். புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்படும். ஒட்டுமொத்த டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கருதப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் எஸ்210 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








