கோர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய 2 கார்கள்... கடவுளாக வந்து பல உயிர்களை காப்பாற்றியது இதுதான்
கோர விபத்தில் இருந்து 2 கார்கள் நூலிழையில் தப்பிய வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், இந்திய சாலைகள் உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக திகழ்கின்றன. இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை காவு வாங்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது அபாயகரமானது. ஏனெனில் இங்கு ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட கால்நடைகளுடன் சேர்த்து வாகனங்களும் திடீர் திடீரென குறுக்கே வரும். அப்போது மிக அதிக வேகத்தில் பயணித்து கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேரலாம்.

இதனை நன்கு அறிந்திருந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் தொடர்ந்து அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். உலக அளவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-17ல், மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) கார் ஒன்று, மிக அதிக வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த ஆகும்.

மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்கள் என்ற அதிவேகத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 சென்று கொண்டிருந்த நிலையில், சாலை சந்திப்பு ஒன்று வந்தது. அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் திடீரென சாலையை கடக்க முயன்றது.

இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகிய 2 கார்களும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழவில்லை. இன்னோவா கார் சாலையை கடக்க முயல்வதை பார்த்ததும், எக்ஸ்யூவி500 காரின் டிரைவர் உடனே பிரேக்கை மிதித்தார்.

இதனால் நல்ல வேளையாக கார் அப்படியே நின்று விட்டது. இதற்கு எக்ஸ்யூவி500 காரின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்குதான் (ABS-Anti-lock Braking System) நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாமல் போயிருந்தால் நிலைமை தலை கீழாக மாறியிருக்கும்.

இரண்டு கார்களும் பயங்கரமாக மோதிக்கொண்டு, அதில் பயணம் செய்தவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத காராக இருந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த சூழலில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. சாலை விபத்துக்களில் இருந்து வாகன ஓட்டிகளையும், அதில் பயணம் செய்பவர்களை காக்கும் ஆபத்பாந்தவனாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் திகழ்ந்து வருகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தின் முக்கியத்துவத்தை மத்திய அரசும் நன்றாக புரிந்து கொண்டுள்ளது. எனவே 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரண்டு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தையாவது வாகன உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வாகனங்களில் போதுமான அளவிற்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.

இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் (Bharat New Vehicle Safety Assessment Program-BNVSAP), மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை இந்த திட்டம் கட்டாயமாக்குகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்று எஞ்சிய பாதுகாப்பு வசதிகளும் முக்கியமானவைதான். இதன்மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்க, மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக வழங்க வேண்டியிருப்பதால், வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலையை காட்டிலும் பாதுகாப்பே முக்கியம்.


Click it and Unblock the Notifications








