சிறிய நகரங்களிலும் நெக்ஸா ஷோரூம்களை திறக்க மாருதி திட்டம்!
சிறிய நெக்ஸா ஷோரூம்களை திறப்பதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கார் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை வைத்திருகிறது மாருதி நிறுவனம்.

தற்போது நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்புகளும், 3,200 ஒர்க்ஷாப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, 250 நெக்ஸா ஷோரூம்களும் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கார் விற்பனையில் சுணக்கம் காணப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக 1,000 விற்பனை மையஙகளையும், 1,800 ஒர்க்ஷாப்புகளையும் திறப்பதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் 5,000 டீலர்கள் மற்றும் ஒர்க்ஷாப்புகளுடன் தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும், மாருதி ஷோரூம்கள் இரண்டு வகையில் செயல்படுகின்றன. சாதாரண ரக கார்கள் அரேனா ஷோரூம்கள் மூலமாகவும், பிரிமீயம் கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், நெக்ஸா ஷோரூம்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக சிறிய நகரங்களிலும் நெக்ஸா ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஷோரூம்கள் அளவில் சிறியதாக இருக்கும்.

அதாவது, இரண்டு கார்களை மட்டுமே நிறுத்துவதற்கான இடவசதியை பெற்றிருக்கும். ஆனால், வழக்கமான நெக்ஸா ஷோரூம்களின் அனுபவத்தை வாடிக்கையாளர் பெற முடியும். இதன்மூலமாக, நெக்ஸா ஷோரூம்களை அமைப்பதற்கான முதலீடு பாதியாக குறைப்பதற்கான திட்டத்தை மாருதி கையில் எடுத்துள்ளது.

சிறிய நகரங்களுக்கு செல்வதன் மூலமாக மாருதியின் பிரிமீயம் வகை கார்களான பலேனோ, சியாஸ், எஸ் க்ளாஸ் உள்ளிட்ட கார்களின் விற்பனையையும் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Livemint


Click it and Unblock the Notifications








