பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்?
பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு கார் நிறுவனங்கள் எஞ்சின்களை மேம்படுத்தி வருகின்றன. ஆனால், டீசல் கார் எஞ்சினை மேம்படுத்துவதற்கும், விலை நிர்ணயம் செய்வதிலும் பெரிய சவால்கள் உள்ளன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி டீசல் எஞ்சின் கார்களுக்கு முழுக்குப் போட இருப்பதாக அறிவித்தது. இந்த சூழலில், ஹூண்டாய் உள்ளிட்ட சில முன்னணி கார் நிறுவனங்கள் தொடர்ந்து டீசல் கார்களையும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தன.

அதாவது, மாருதியின் டீசல் கார்கள் விற்பனை இழப்பை இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில், டீசல் கார் விற்பனையை நிறுத்தினால் ஏற்படும் இழப்பு குறித்து மாருதி ஆய்வு செய்து வருகிறது.

தற்போது பல்வேறு கார் மாடல்களில் மாருதி பயன்படுத்தி வரும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் முற்றிலுமாக சந்தையிலிருந்து விடைபெற இருக்கிறது. சிறிய கார்களில் டீசல் எஞ்சின் ஆப்ஷனை வழங்குவதில்லை என்ற முடிவில் மாருதி திடமாக இருக்கிறது. சிறிய கார்களில் டீசல் தேர்வுக்கு மாற்றாக சிஎன்ஜி எரிபொருள் தேர்வை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மாருதி எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ், எஸ் க்ராஸ், எக்ஸ்எல்-6 உள்ளிட்ட கார்களில் புதிய டீசல் எஞ்சினை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மாருதிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.

ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் இந்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஏற்கனவே மாருதி எஸ் க்ராஸ் காரில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட எஸ் க்ராஸ் கார் விற்பனை மோசமாக இருந்ததால், இந்த எஞ்சின் தேர்வு நீக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்த புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வை கையில் எடுப்பதற்கு மாருதி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படும். எனினும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும்போது இதன் செயல்திறனில் மாற்றம் இருக்கலாம்.

ஏற்கனவே மாருதி பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர் ஆகிய கார்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. எர்டிகா அடிப்படையிலான எக்ஸ்எல்-6 மற்றும் எஸ் பிரெஸ்ஸோ ஆகிய கார்களிலும் கூட பிஎஸ்-6 எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மாருதியின் முன்னணி கார் மாடல்களில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் நிறுத்தப்பட இருப்பதாக, நிச்சயம் குறிப்பிடத்தக்க இழப்பை மாருதிக்கு தரும். எனவே, இந்த இழப்பை சரிகட்டுவதற்கான மாற்று திட்டங்கள் குறித்து மாருதி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ் கார்களில் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பருடன் பிஎஸ்-4 எஞ்சின் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








