இந்தியாவில் 2 கோடி கார்களை விற்பனை செய்து மாருதி புதிய சாதனை
இந்தியாவில் மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் மொத்த கார் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 1983ம் ஆண்டு கார் உற்பத்தியை துவங்கியது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விலை, மைலேஜ் என்ற இரு அஸ்திரங்களை வைத்து சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தியது.

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள், வலுவான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு போன்றவற்றுடன் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் மாருதி கார்களுக்கு எப்போதுமே முதலிடம் இருந்து வருகிறது. இதனால், விற்பனையில் மாருதி சுஸுகி கொடி கட்டி பறக்கிறது.

இந்த நிலையில், கார் வர்த்தகத்தை மாருதி நிறுவனம் துவங்கி 37 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை 2 கோடி யூனிட்டுகள் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

கார் வர்த்தகத்தை துவங்கி முதல் 29 ஆண்டுகளில்தான் ஒரு கோடி கார்களை விற்பனை செய்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் அடுத்த ஒரு கோடி கார்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. அதாவது, மிக குறுகிய காலத்தில் இரண்டாவது ஒரு கோடி என்ற இமாலய இலக்கை தாண்டிய இருக்கிறது.

தகர டப்பா, பாதுகாப்பில்லாத கார் என்று பல்வேறு கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் வாடிக்கையாளர் சேவையில் மாருதி முன்னிலை வகிக்கிறது. விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்திலும் மாருதி வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது.

கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் 14ந் தேதி மாருதி நிறுவனத்தின் முதல் கார் மாடலாக மாருதி 800 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது ஹேட்ச்பேக், எம்பிவி, எஸ்யூவி என பல்வேறு ரகங்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவின் கார் விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை மாருதி கைவசப்படுத்தி உள்ளது. கடந்த பல மாதங்களாக விற்பனையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும், பிற நிறுவனங்கள் தொட முடியாத அளவு விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. நாட்டின் ஜாம்பவான் கார் நிறுவனமாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








