புதிய 1.5 லி டீசல் எஞ்சினுடன் மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது மாருதி சியாஸ் கார். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட ஜாம்பவான் கார் மாடல்களை ஓரம் கட்டி, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி சியாஸ் காரில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி சொந்தமாக உருவாக்கி இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் தற்போது சியாஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை அதிக முதலீடு செய்து மேம்படுத்த ஃபியட் விரும்பவில்லை. இந்த சூழலில்தான் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கி இருக்கிறது.

மாருதி சியாஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த புதிய எஞ்சின் ஆரம்ப நிலையில் மிகச் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த டீசல் எஞ்சினுடன் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முதல் கியருக்கு அருகில் ரிவர்ஸ் கியர் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், லிஃப்ட் லாக் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது.
இந்த மாடல் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் கார் மாடலாக தொடர்ந்து வாடிக்கையாளர் தேர்வில் முதன்மை வகிக்கும்.

புதிய மாருதி சியாஸ் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது ரூ.9.97 லட்சம் முதல் ரூ.11.37 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மாருதி சியாஸ் கார் வந்தாலும், பழைய 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வரும் வரையில் விற்பனையில் இருக்கும்.

கடந்த 2014ம் ஆண்டு மாருதி சியாஸ் கார் முதல்முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கம் முதலே வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்ததுடன், இந்த செக்மென்ட்டில் கொடிகட்டி பறந்த ஹோண்டா சிட்டியின் நம்பர்-1 இடத்தை பறித்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை காலத்திற்கு முன்பாக கூடுதல் வசதிகள் மற்றும் டிசைனில் மாற்றங்களுடன் மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்தது. மேலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இந்த மாடலில் இடம்பெற்றது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டன.

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தெரிவித்தது. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில், தற்போது டீசல் மாடலிலும் புதிய 1.5 லிட்டர் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 28.02 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், புதிய டீசல் எஞ்சின் 26.82 கிமீ மைலேஜை வழங்க வல்லதாக வந்துள்ளது. இருப்பினும், இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் கார் மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








