டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி!
பெரிய ரக டீசல் கார் உற்பத்தியை தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. டீசல் கார்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், சிறிய ரக டீசல் கார்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தது.

அதேநேரத்தில், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையை தொடர இருப்பதாக தெரிவித்தன. இந்த நிலையில், டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவது குறித்து மாருதி கார் நிறுவனம் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா எக்கானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சிறிய வகை டீசல் கார்களை மட்டுமே நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். பெரிய வகை டீசல் கார்களை உற்பத்தி செய்வது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்படும் பெரிய வகை டீசல் கார்களுக்கு நிர்ணயிக்க வேண்டிய விலை மற்றும் அதற்கான வரவேற்பு குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விலக்கு அளிப்பதில் மாருதி உறுதியாக இருக்கிறது. ஆனால், அந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்துவது குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளது. எனினும், அதற்கான முதலீடும், அந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கான சந்தை வாய்ப்பும் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் கார்களை தொடர்ந்து மாருதி அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், டீசல் எஞ்சின் கார்களால் ஏற்படும் இழப்பை சரிகட்டுவதற்கு, சிஎன்ஜியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.

எனவே, மாருதி ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ், எர்டிகா உள்ளிட்ட கார்கள் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் குறித்து இன்னமும் மாருதி முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications







