பிரபல மாடலின் விலையை அதிரடியாக உயர்த்திய மாருதி சுஸுகி: வழக்கத்திற்கு மாறான செயலால் மக்கள் அதிர்ச்சி
அனைத்து நிறுவனங்களும் அதன் வாகனங்களின் விலையை குறைத்து வரும்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் மட்டும் பிரபல மாடல் ஒன்றின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபல மாடலான ஈகோவின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது விழாக் காலம் பூண்டுள்ளது. பொதுவாக இந்த காலங்களில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற அனைத்து நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும்.
அந்தவகையில், பல நிறுவனங்கள் வருகின்ற பண்டிகைக் காலங்களை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், முற்றிலும் மாறான நடவடிக்கையாக, மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஈகோ மாடல்களின் விலையை ரூ. 6,000-த்தில் இருந்து ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது. மாருதியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு, கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த புதிய க்ராஷ் டெஸ்ட் (மோதல் சோதனை) மற்றும் பாதுகாப்பு விதிகளே முக்கிய காரணமாக அமைகின்றது.

ஆகையால், மாருதி சுஸுகி ஈகோ எம்பிவி ரக காரின் ஆரம்ப நிலை மாடல் தற்போது ரூ. 3.61 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, அதன் இறுதி நிலை மாடலின் விலை ரூ. 6.61 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதிய பாதுகாப்பு மற்றும் க்ராஷ் டெஸ்ட் விதியின் காரணமாக, ஈகோ எம்பிவி ரக காரில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஓட்டுநருக்கான ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றது.

தற்போது, ஈகோ எம்பிவி ரக கார் பிஎஸ்-4 தரத்திலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, நான்கு சிலிண்டர்கள் அமைப்பைக் கொண்ட மோட்டாரால் இயங்குகின்றது.
1,196 சிசி திறனைக் கொண்ட அந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது பெட்ரோல் எஞ்ஜினின் திறனாகும்.

அதுவே சிஎன்ஜி தேர்வில் கிடைக்கும் ஈகோ, அதிகபட்சமாக 63 எச்பி மற்றும் 85 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கிடைக்கின்றது.

தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், விரைவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் மீண்டுமொரு முறை விலையுயர்வைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய விதிக்கான காலக்கெடு வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
அண்மைக் காலங்களாக இந்திய வாகன சந்தை கடுமையான மந்த நிலையில் சிக்கித் தவித்து வருகின்றது. இதில், மாருதி சுஸுகி நிறுவனமும் தப்பிக்கவில்லை.

இந்த நிலையில், மாருதி சுஸுகியின் பிரபல ஈகோ மாடலின் விலையுயர்ந்திருப்பது, அந்த மாடலின் விற்பனையை பாதிக்குமோ என்ற அச்சம் நிலவிய வண்ணம் உள்ளது.
இருப்பினும், இந்த விலையுயர்வு நியாயமானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பயணிகள் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பை அதிகரித்ததன் காரணத்தினாலயே இந்த விலையுயர்வு பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








