3 காரணங்களால் தள்ளி போகும் மாருதி சுஸுகி மின்சார கார் அறிமுகம்: அதிர்ச்சி தகவல் கசிவு!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மின்சார காரின் அறிமுகம் தள்ளிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வாகனச் சந்தையின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. இவை, சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்பாதல், இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமான முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், பதிவு செய்வதில் சலுகை, வரி தள்ளுபடி மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், எரிபொருள் வாகனங்களுக்கு பார்த்தோமேயானால், கடுகளவில்கூட சலுகை அறிவிக்கப்படவில்லை. மாறாக, ஒட்டு மொத்த பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை பயன்பாட்டில் ஒழிக்கும் வகையிலான முயற்சியில் அரசு செயல்பட்டு வருகின்றன.

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்தவகையில், வாகன உலகின் ஜாம்பவானான டாடா மோட்டார்ஸ், புதிய நான்கு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில், டிகோர் ரகத்திலான மின்சார கார் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதைத்தொடர்ந்து, டியாகோ, நெக்ஸான் மற்றும் புதிய மாடலில் மின்சார ரக காரை அந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இதேபோன்று, இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் இத்தகைய நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதற்காக மற்றுமொரு ஜாம்பவான் வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவிடம் அது கூட்டணி வைத்துள்ளது.

மேலும், இந்த கூட்டணிமூலம் தயாரிக்கப்படும் மின்வாகனங்களை வருகின்ற 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் தற்போது அந்நிறுவனம் தற்போது சிக்கலைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை மோட்டார்பீம் தளம் வெளியிட்டுள்ளது.

இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. நிதி நெருக்கடி, சார்ஜிங் நிலையங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நுகர்வு உள்ளிட்டவை இருக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. விரைவில் இதை பற்றிய வெளிவரலாம் என கூறப்படுகின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம், பரிசோதனைக்காக 50க்கும் மேற்பட்ட வேகன்ஆர் கார்களை தயாரித்திருந்தது. இதனைதான், கடந்த ஆண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அப்போது, எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் இதை உறுதி செய்யும் வகையில் வெளியாகியது.

இந்த கார்கள் அனைத்தும் சுஸுகி கார்பரேஷன் ஜப்பான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை. ஒரு முழுமையான சார்ஜில் இவை எவ்வளவு தூரம் செல்லும், அதற்கு எவ்வளவு செலவாகும் போன்ற தகவலை அறியும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், எரிபொருள் வாகனத்தைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிக தயாரிப்பு செலவைக் கொண்டதாக அவை இருந்தன.

ஆகையால், இந்த கார் கமர்ஷியல் பிரிவில் கொண்டு செல்வது மிகப் பெரிய சவாலாக மாறியது. இதேபோன்று, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியும் அந்நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்தியாவில் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதை சார்ஜிங் செய்வதற்கான வசதிகள் முழுவீச்சில் செய்யப்படவில்லை என்ற கூறலாம். இது, மந்தமான நிலையிலேயே காணப்படுகின்றது.

அதேசமயம், இந்தியாவில் 60 சதவீத நபர்கள் சொந்த பார்க்கிங் வசதி இல்லாமல், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்படுகின்றன. ஆகையால், அவற்றை சார்ஜ் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, தற்போது நாட்டில் செயல்படும் பெட்ரோல் பங்குகளுக்கு இணையான அளவில் மின்சார சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே, 100 சதவீத மின் வாகன பயன்பாட்டிற்கு உதவும்.

ஆகையால், இதுவும் மாருதி சுஸுகி நிறுவனம், அதன் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் சிக்கலைச் சந்தித்துள்ளது.
இதேபோன்று, ஃபேம்-2 திட்டம் தனியார் மின் வாகனங்களுக்கு பயனளிக்காத வகையில் அமைந்துள்ளது. ஆகையால், இதுவும் மாருதி சுஸுகியின் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் தள்ளி போவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

பொதுவாக, மின்வாகனங்கள் அதிக விலைக் கொண்டவையாக இருப்பதன் காரணத்தினாலேயே, மக்கள் அதனை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். அப்படியே, மின் வாகனங்களை வாங்கினாலும் அதனை சார்ஜ் செய்வதில் பெரும் சிக்கல் நிலவும் என தெரியவருகின்றது. இதுவே, மின் வாகனங்கள் பயன்பாட்டில் வருவதற்கு பல வருடங்கள் ஆகும் என வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், மேற்கூறிய இந்த காரணங்களே மாருதி சுஸுகி நிறுவனம், அதன் மின் வாகனங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் அறிமுகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் முதல் கட்டமாக ஓலா, உபர் மற்றும் அரசுத் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளது. ஆகையால், இது தனிநபர் பயன்பாட்டிற்கு வருவதற்கு கூடுதல் சில ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் ஒரு முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை செல்லும் திறனை வழங்கும். எனவே, நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த கார் உகந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








