மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள்!
அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த முறை அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மூவ் 2018 என்ற மின்சார வாகனங்களுக்கான மாநாட்டில் மாருதி வேகன் ஆர் காரின் மின்சார மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் சுஸுகி சோலியோ என்ற பெயரில் விற்பனையாகும் வேகன் ஆர் காரின் அடிப்படையில் எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் தற்போது இந்தியாவில் மிக திவீரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மின்சார வேகன் ஆர் கார்களை சாலை சோதனைகளுக்கு மாருதி நிறுவனம் உட்படுத்தி இருக்கிறது.

இந்தத நிலையில், அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு சீதோஷ்ண நிலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன.

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய வேகன் ஆர் மின்சார கார் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன், பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரண்டு ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த சோதனை ஓட்டங்களின் அடிப்படையில் கிடைக்கும் ஆய்வுத் தரவுகளின் கீழ் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும். சோதனை ஓட்டத்தில் இருக்கும் மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்களில் 10 - 25 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த கார்களின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். மேலும், வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் உள்பட இந்தியாவில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் மின்சார கார்களுக்கான பேட்டரியை உற்பத்தி செய்வதற்காக ஆலை குஜராத்தில் கட்டப்பட்டு வருகிறது.

டொயோட்டா கார் நிறுவனத்தின் கூட்டணியுடன் இந்த பேட்டரி ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது மாருதி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்களின் மின்சார கார்களுக்கான பேட்டரி இந்த ஆலையிலிருந்து சப்ளை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








