இழந்த பலத்தை மீண்டும் பெறுகிறது இந்திய ராணுவம்... மத்திய அரசு திடீரென எடுத்த அதிரடி முடிவு இதுதான்
இழந்தை பலத்தை இந்திய ராணுவம் மீண்டும் பெறவுள்ளது. இதற்காக விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy) காரை தெரியாதவர்கள் எவரும் நிச்சயமாக இருக்க முடியாது. ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஜிப்ஸி திகழ்ந்து வருகிறது.

இதனால்தான் இந்திய ராணுவத்தின் ஆஸ்தான வாகனங்களில் ஒன்றாக ஜிப்ஸி உருவெடுத்தது. சாதாரண வாடிக்கையாளர்களை காட்டிலும், இந்திய ராணுவம்தான் மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை அதிகமாக பயன்படுத்தி வந்தது.

இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாருதி சுஸுகி ஜிப்ஸி காருக்கு விடை கொடுக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. அதற்கு பதிலாக டாடா சபாரி ஸ்ட்ரோம் காரை மிக கடினமான நிலப்பரப்புகளில் இந்திய ராணுவம் சோதனை செய்து பார்த்தது.

இதில், டாடா சபாரி ஸ்ட்ரோம் வெற்றி பெற்றது. எனவே 3,192 சபாரி ஸ்ட்ரோம் கார்களை வாங்க டாடா நிறுவனத்திற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்தது. தற்போது இந்திய ராணுவத்தில் டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்கள் சேர்க்கப்பட்டு விட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதனை பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் டாடா நிறுவனம் 3,192 சபாரி ஸ்ட்ரோம் கார்களையும் இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்து விட்டதா? அல்லது இன்னும் ஒரு சில யூனிட்கள் டெலிவரி செய்யப்பட வேண்டுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இதனிடையே மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் ஜிப்ஸி கார்களின் உற்பத்தியை நிறுத்தியது. விரைவில் அமலுக்கு வரவுள்ள க்ராஷ் டெஸ்ட் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப ஜிப்ஸி கார் இல்லாததால்தான், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த முடிவை எடுத்தது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜிப்ஸி காரின் விற்பனையையும் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிறுத்தி விட்டது. இந்திய ராணுவத்தின் மூலமாகவே மாருதி சுஸுகி ஜிப்ஸி காருக்கு கணிசமான விற்பனை எண்ணிக்கை கிடைத்து கொண்டிருந்தது.

ஆனால் இந்திய ராணுவம் டாடா சபாரி ஸ்ட்ரோம் காருக்கு மாறுவது என முடிவெடுத்ததால், அதுவும் நின்று போனது. எனவேதான் ஜிப்ஸி காரின் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடியான நிலைக்கு மாருதி சுஸுகி நிறுவனம் தள்ளப்பட்டது.

ஆனால் ஜிப்ஸியின் கதை அத்தோடு முடியவில்லை. இந்திய ராணுவத்திற்கு தற்போது ஜிப்ஸி கார்கள் மீண்டும் தேவைப்படுகின்றன. எனவே 3,051 புதிய ஜிப்ஸி கார்கள் வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இந்திய ராணுவம் ஆர்டர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இந்திய ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஜிப்ஸி கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொது மக்களுக்கு ஜிப்ஸி மீண்டும் விற்பனைக்கு வராது.

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக மட்டும் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய ராணுவத்திற்கு உடனடியாக 8 ஆயிரம் கார்கள் தேவைப்படுகின்றன. மாருதி சுஸுகி ஜிப்ஸி, டாடா சபாரி ஸ்ட்ரோம் மூலம் அந்த தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.

மாருதி சுஸுகி ஜிப்ஸியை இந்திய ராணுவம் மீண்டும் தேர்வு செய்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. டாடா சபாரி ஸ்ட்ரோம் கார் மிகவும் அகலமாக இருப்பதால், இமயமலையின் குறுகலான சாலைகளில் சென்று வர முடியவில்லை.

இதுதவிர பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு மாற்றாக இந்திய மார்க்கெட்டில் வேறு எந்த காரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இமயமலை போன்ற இடங்களில் டீசல் இன்ஜின் எஸ்யூவி கார்களை காட்டிலும், பெட்ரோல் இன்ஜின் எஸ்யூவி கார்கள் சிறப்பாக செயல்படும்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ''புதிய பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப ஜிப்ஸி கார் இல்லை என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் எங்களிடம் தெரிவித்தது.

அத்துடன் அதனை மீண்டும் உற்பத்தி செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் எங்களிடம் எடுத்துரைத்தது. இதனால் எங்கள் தேவை குறித்து அரசிடம் எடுத்துரைத்தோம். இதன் காரணமாக மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அதாவது மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டாலும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாது. பாரத் புதிய வாகன மதிப்பீட்டு திட்டம் ( BNVSAP - Bharat New Vehicle Safety Assessment Program), பிஎஸ்-6 ஆகிய விதிமுறைகள் அதற்கு பொருந்தாது.

என்றாலும் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், 4×4 டிரைவ் சிஸ்டம் உடன் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. ராணுவத்தில் அல்லாத பொதுமக்களுக்கும் விற்பனையாகி கொண்டிருந்த நேரத்தில், மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில், 1.3 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்து.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு 6.5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) ஜிப்ஸி விற்பனை செய்யப்பட்டு வந்தது.


Click it and Unblock the Notifications








