மாருதி கரொல்லா ஆல்டிஸ் கார் வருவதில் ஒரு சிக்கல்?
மாருதி பிராண்டில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வருவதில் சந்தேகம் எழுந்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனமும் கூட்டணி அமைத்து செயல்பட இருப்பது அறிந்த விஷயம்தான். மாருதி நிறுவனத்தின் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்கள் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. அதேபோன்று, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரை மாருதி ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி பிராண்டில் வருவதில் சிக்கலும் சந்தேகமும் இருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது.

ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், புதிய தலைமுறை கரொல்லா ஆல்டிஸ் கார் அறிமுகத்தை டொயோட்டா தவிர்க்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மேலும், இதற்கான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு டொயோட்டா விரும்பவில்லை என்றும் தெரிகிறது.

ஏனெனில், இந்த டி செக்மென்ட் செடான் கார்களின் விற்பனை மந்தமாகி இருக்கிறது. இதனால், மேம்படுத்தி அறிமுகம் செய்தாலும், அதற்கு ஏற்ற விற்பனை இல்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மேலும், இந்த விலை ரகத்தில் எஸ்யூவி ரக கார்களின் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பி இருக்கிறது. மேலும், பல புத்தம் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், டி செக்மென்ட் செடான் கார்களுக்கான மார்க்கெட் அருகி வருகிறது.

இதனால், புதிய கரொல்லா ஆல்டிஸ் காரை மேம்படுத்துவை தவிர்க்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி பிராண்டில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் ரீபேட்ஜ் செய்யப்படுவது சந்தேகத்திற்கு இடமாகி இருக்கிறது.

மேலும், கரொல்லா ஆல்டிஸ் கார் விலக்கப்பட்டால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவான்ஸா மற்றும் ரஷ் உள்ளிட்ட எஸ்யூவி ரக மாடல்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் டொயோட்டா பரிசீலித்து வருகிறது. இதனால், அந்த வர்த்தக இழப்பை சரிகட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
Source:ET Auto


Click it and Unblock the Notifications








