வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-5 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தும் பணிகளிலும், புதிய எஞ்சின்களை பொருத்துவதிலும் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதற்கு மாருதி முடிவு செய்திருந்தது. ஆனால், பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் முடிவு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தது. இதனால், தற்போது புதிய முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது.

அதாவது, நடுத்தர வகை கார்களில் டீசல் எஞ்சினை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஎன்பிசி டிவி18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆர்.சி.பர்கவா கூறுகையில்,"பிஎஸ்-6 டீசல் எஞ்சின் மாடல்களை நடப்பு நிதி ஆண்டு வரை அறிமுகம் செய்ய இயலாது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும்போது மட்டுமே, டீசல் எஞ்சின்களை அறிமுகம் செய்ய இயலும்.

பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களில் பிஎஸ்-4 தரமுடைய எரிபொருளில் இயக்க இயலாது. பிஎஸ்-6 எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும்போது மட்டுமே டீசல் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்த முடியும்," என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, பிஎஸ்-6 தரமுடைய டீசலைவிட விட பிஎஸ்-4 டீசலில் 5 மடங்கு அதிக சல்ஃபர் இருக்கிறது. பிஎஸ்-4 டீசலில் பிஎஸ்-6 டீசல் எஞ்சினை இயக்கும்போது, அது புகைப்போக்கி அமைப்பு மற்றும் வடிகட்டி அமைப்புகளில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். இதனால், கார் எஞ்சினின் செயல்திறன், மைலேஜ், ஆயுட்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதன் காரணமாகவே, மாருதி நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின் டீசல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், ஏற்கனவே தெரிவித்தபடி, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கைவிடப்படுவது உறுதியான விஷயம்தான். ஆனால், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி தொடர்ந்து மாருதி பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.

அதாவது, சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார் மாடல்களில் இந்த டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், சிறிய கார்களில் டீசல் எஞ்சினை கைவிடும் முடிவில் மாருதி திடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வரும் 2021ம் ஆண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சினை மாருதி தனது நடுத்தர வகை கார்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தக்கவாறு விலையும் வெகுவாக உயரும் வாய்ப்பும் உள்ளது.
Source:CNBC TV18


Click it and Unblock the Notifications