பிஎஸ்-6 கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி... என்னவென்று தெரியுமா?
பிஎஸ்-6 கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. எனவே இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை மட்டுமே வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

தற்போது இந்தியாவில் பிஎஸ்-4 விதிமுறை நடைமுறையில் உள்ளது. பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் பணிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில், ஒரு சில நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் ஒன்று. இந்த சூழலில், பிஎஸ்-6 வாகனங்கள் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிஎஸ்-6 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருப்பதுதான் அந்த புதிய மைல்கல்.

அதுவும் முதல் பிஎஸ்-6 வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஏழே மாதங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டி பிடித்து அசத்தியுள்ளது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் 3 லட்சத்திற்கும் அதிகமான பிஎஸ்-6 வாகனங்களை விற்பனை செய்திருக்கும் தகவலை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான (எம் & எஸ்) ஷசாங்க் ஸ்ரீவத்ஸாவா ஜெய்ப்பூரில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இது எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களை மக்கள் விரும்புகின்றனர் என்பதையும் இது எதிரொலிக்கிறது.

பிஎஸ்-4ல் இருந்து பிஎஸ்-6க்கு மாறுவது தொடர்பாக ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் மனதில் குழப்பங்கள் இருந்தது. எனவே தெளிவை வழங்குவதற்காக நாங்கள் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டோம். இதில், பிஎஸ்-6 தொழில்நுட்பத்திற்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தோம்'' என்றார்.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது அதிகம் விற்பனையாகும் மாடல்களான பலேனோ மற்றும் ஆல்டோ கார்களின் பிஎஸ்6 வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள காலக்கெடுவான 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்த பிஎஸ்-6 கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில், ஆல்டோ 800, பலேனோ, வேகன் ஆர் (1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர்) ஸ்விப்ட், டிசையர், எர்டிகா மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்எல்6 மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்களின் பெட்ரோல் மாடல்களில் பிஎஸ்6 வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications