திடீரென உயர்த்தப்பட்ட மாருதி சுஸுகி கார்கள் விலை... மத்திய அரசின் இந்த உத்தரவுதான் இதற்கு காரணம்...
மாருதி சுஸுகி நிறுவன கார்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு மிக குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்வதால்தான், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகியால் திகழ முடிகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யும் மிக மலிவான விலை கொண்ட கார் ஆல்டோ 800தான் (Alto 800). இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.67 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் எஸ்-க்ராஸ் (S-Cross). இதன் எக்ஸ் ஷோரூம் விலையும் கூட 11.48 லட்ச ரூபாய் மட்டும்தான். பொதுவாக செயல்திறன், லக்ஸரி வசதிகள் ஆகிய காரணிகளை காட்டிலும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்கள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கார்கள் அப்படிப்பட்டவைதான். இதனால்தான் மாருதி சுஸுகி ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சூழலில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் (Maruti Suzuki India- MSI) தனது கார்களின் விலையை 689 ரூபாய் வரை உயர்த்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் (ஏப்ரல் 1) நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது (Ministry of Road Transport & Highways- MoRTH), 1989 மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (High Security Registration Plates-HSRP) பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. வாகன திருட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகதான் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இனி வாகனங்களை விற்பனை செய்யும்போதே அவற்றில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்திதான் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

இதன் காரணமாகதான் கார்களின் விலையை 689 ரூபாய் வரை உயர்த்தியிருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை பெரிய அளவிலான வளர்ச்சி இல்லாமல் சற்று மந்தமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த மார்ச் மாதத்திற்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் நேற்று வெளியானது.

இதன்படி உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து, கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1,58,076 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,60,598 ஆகும். இதன் மூலம் 1.6 சதவீத வீழ்ச்சியை மாருதி சுஸுகி நிறுவனம் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications







