பேசாம கார் விலைய குறைச்சுடுவோமா... மாருதி பரிசீலனை!
கார் விலையை குறைப்பது குறித்து மாருதி நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த 10 மாதங்களாக மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை சரிவு முகத்திலேயே உள்ளது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளையும் அந்நிறுவனம் அறிவித்து வருகிறது.

பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் விற்பனை அதிகரிக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் மாருதி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. கார் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கார்ப்பரேட் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இதன் தாக்கம் காரணமாக, கார் நிறுவனங்களுன் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதையடுத்து, கார்களின் விலையை குறைக்கலாமா என்று மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இதனை அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்சி.பர்கவா தெரிவித்துள்ளார். கார் விற்பனையை அதிகரிக்க விலையை குறைப்பது ஒரு தீர்வாக அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக பர்கவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

அதேநேரத்தில், ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக, கார் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அதிகபட்ச சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளன.

கார்ப்பரேட் வரி குறைப்பால் கார் நிறுவனங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும், ஆனால், அது கார் விலையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமற்றது என்று டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறி இருக்கிறார்.

கார்ப்பரேட் வரி குறைப்பால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அதிக முதலீடுகளை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சமூக நல திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கார்களுக்கு வழங்கப்படும் சேமிப்புச் சலுகைகளை போதுமான என்று ஹோண்டா கார் நிறுவனம் கருதுகிறது. விலை குறைப்பு என்பது தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் இதே கருத்தை கொண்டுள்ளது. எனினும், பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகைகள் காரணமாக கார் விற்பனையில் உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








